Top bar Ad

23/9/18

சிவவாக்கியர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. தவ வாழ்க்கை
  3. இல்லறத் துறவி
  4. அவர்‌ வாழ்க்கை பற்றிய கர்ண பரம்பரைக் கதை குருதரிசனம்‌
  5. இல்‌லற வாழ்க்கை
  6. பற்றற்ற நிலை
  7. கொங்கணவர் நட்பு
  8. துறவு வாழ்க்கை
  9. சமாதி கூடல்‌

முன்னுரை


சிவ வாக்கியர்‌ சங்கர குலத்தில்‌ தை மாதம்‌ மகம்‌ நட்சத்திரத்தில்‌ (சிம்ம ராசியில்‌) பிறந்தார்‌. பிறக்கும்‌ போதே சிவசிவ என்று சொல்லிக் கொண்டே பிறந்தவர்‌ என்பதால்‌ சிவ வாக்கியர்‌ என்று அழைக்கப் பெற்றார்‌ என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது. இவர்‌ தனது பாடல்‌ தொகுப்பிற்கு சிவவாக்கியம் என்று பெயர்‌ சூட்டியுள்ளார்‌. அந்த நூலின்‌ காப்புச் செய்யுளாகிய

அரியதோர்‌ நமச்சிவாயம்‌ ஆதிஅந்தம்‌ ஆனதும்‌ ஆறிரண்டு நூறுதேவர்‌ அன்றுரைத்தமந்திரம்‌ அரியதோர்‌ எழுத்தை உன்னி சொல்வேன்‌ சிவ வாக்கியம்‌ தோஷ தோஷபாவமாயை தூர தூரஓடவே
என்ற பாடலைக் கொண்டு அவர்‌ நூல்‌ தலைப்பை உணரமுடிகிறது. சிவ வாக்கியம்‌ என்ற நூலை எழுதியதாலேயே அவர் சிவவாக்கியர்‌ என்று அழைக்கப்பட்டார்‌ என்று கொள்வதே பொருத்தமாகும்‌.

தவ வாழ்க்கை


சிவ வாக்கியரின்‌ தந்தை தெய்வச்‌ சிலைகள்‌ செய்து விற்றுப்‌ பிழைப்பு நடத்தி வந்தவர்‌. தாயோ அருந்ததிக்கு ஒப்பான கற்புடைய மங்கை. இந்தத்‌ தம்பதியர்‌ சித்தர்களை அடுத்து வாழ்ந்து வந்தனர்‌. தங்கள்‌ மகன்‌ பெரிய தவயோகியாக வர வேண்டும்‌ என்பதற்காக தக்க குரு ஒருவரைத்‌ தேடிக் கண்டுபிடித்து அவனுக்கு ஞானக்கல்வி புகட்டுமாறு வேண்டிக் கொண்டார்கள்‌. சிவ வாக்கியரும்‌ பதினெண்‌ சித்தர்களில்‌ பலரை நாடி அவர்களிடம்‌ ஆர்வமுடன்‌ வேதாந்தம்‌ கற்று யோக நெறியில்‌ சென்று சகல சித்திகளும்‌ அடையப் பெற்றார்‌. (இச்செய்திகள்‌ அகத்தியர்‌ 12000 நூலில்‌ 434 முதல்‌ 441 வரை உள்ள பாடல்களில்‌ இடம்பெற்றுள்ளன.

இல்லறத் துறவி


துறவியாக வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென்று திருமணம்‌ செய்து கொள்ளும்‌ ஆசை எழுந்தது. பெற்றோரும்‌ தகுதி வாய்ந்த ஒரு பெண்ணைப்‌ பார்த்து அவருக்குத்‌ திருமணம்‌ செய்து வைத்தார்கள்‌ (போகர்‌7000 சப்தகாண்டம்‌ பாடல்கள்‌ 5759, 5760). மேலும்‌ இவர்‌ திருமூலர்‌ மரபில்‌ வந்த பெண்ணின்‌ மகன்‌ என்றும்‌ இவரது குடும்ப வாழ்க்கையில்‌ இவருக்கு சிவானந்தர்‌ என்ற சித்தபுருஷர்‌ மகனாகப்‌ பிறந்தார்‌ என்றும் போகர்‌ கூறுகிறார்‌. ஏழாண்டு குடும்ப வாழ்விற்குப்‌ பிறகு மீண்டும்‌ துறவு மேற்கொண்டு பல ஊர்களும்‌ சுற்றிப்‌ பல சீடர்களுக்கு தவ யோகம்‌ பயிற்றுவித்து விட்டு கடைசியாக கும்பகோணத்தில்‌ சமாதி பூண்டார்‌. இதுதான்‌ சிவவாக்கியரின்‌ நம்பத்தகுந்த உண்மை வரலாறு.

அவர்‌ வாழ்க்கை பற்றிய கர்ண பரம்பரைக் கதை குருதரிசனம்‌


சிவ வாக்கியரின்‌ திருமண வாழ்க்கையைப்‌ பற்றி செவி வழிச் செய்தியாக ஒரு கதை உள்ளது. அக்கதையைத்‌ திருநெல்வேலி முருகதாச சுவாமிகள்‌ (1840-1899) பாடியுள்ள புலவர்‌ புராணம்‌ உறுதி செய்கிறது. அக்கதை வருமாறு:

சிவ வாக்கியர்‌ சித்தன்‌ போக்கு சிவன்‌ போக்கு என்ற பழமொழிக்கிணங்க தமிழகத்திலிருந்து கால்‌நடையாகவே காசிக்குச்‌ சென்றார்‌. காசியில்‌ ஒரு தெரு ஓரத்தில்‌ ஒரு சக்கிலியன்‌ செருப்பு தைத்துக் கொண்டிருந்தான்‌. அவன்‌ முகத்தில்‌ காணப்பட்ட பிரம்மதேஜஸ்‌ சிவவாக்கியரை அவன்‌ பால்‌ ஈர்த்தது. அவர்‌ அவனை அடைந்த மாத்திரத்தில்‌ அந்த சக்கிலியன்‌ தன்‌ பையிலிருந்த ஒரு நாணயத்தையும்‌ ஒரு பேய்ச்‌ சுரைக்காயையும்‌ கொடுத்து இந்த நாணயத்தை கங்கையிடம்‌ கொடுத்துவிட்டு இந்த பேய்ச்‌ சுரைக்காயைக்‌ கழுவிக்கொண்டு வா என்று கூறினான்‌.

ஏன்‌ என்று கேட்காமல்‌ கங்கைக்‌ கரையை அடைந்த சிவவாக்கியர்‌ அந்த நாணயத்தை கங்கையில்‌ வீசி எறிந்தார்‌. உடனே வளையல்‌ அணிந்த ஒரு கை கங்கையிலிருந்து வெளிப்பட்டு அந்தக்‌ காசைப்‌ பெற்றுக்கொண்டது. பிறகு அவர்‌ சுரைக்காயைக்‌ கழுவி எடுத்துக் கொண்டு சக்கிலியனிடம்‌ வந்தார்‌.

சக்கிலியன்‌, நீ கங்கையில்‌ போட்ட காசை இங்கே வாங்கிக் கொள்‌ என்று தன்‌ தோல் பையைத் திறந்தான்‌.அதில்‌ கங்கை நீர்‌ நிறைந்திருந்தது. அத்தண்ணீரிலிருந்து கங்கா தேவியின்‌ வலக்கை வெளிப்பட்டு அந்தக்‌ காசை சிவவாக்கியரிடம்‌ கொடுத்தது. பிறகு சக்கிலியன்‌ கொஞ்சம்‌ மணலையும்‌ அந்தப்‌ பேய்ச்‌ சுரைக்காயையும்‌ அவரிடமே கொடுத்து இதை எந்தப்‌ பெண்‌ சமைத்துக்‌ கொடுக்கிறாளோ அவளை மணந்துகொள்‌. உன்‌ வாழ்க்கை நன்றாக அமையும்‌, என்று வாழ்த்தி அனுப்பினான்‌. தான்‌ எண்ணி வந்த நோக்கம்‌ இந்த சக்கிலியனுக்கு எப்படித்‌ தெரியும்‌? என்ற ஆச்சர்யத்துடன்‌ அவனையே குருவாகக்‌ கொண்டு அவன் காலைத் தொட்டு வணங்கி விட்டு அந்த மணலையும் பேய்ச் சுரைக்காயையும்‌ எடுத்துக்கொண்டு விரைந்து தமிழகம்‌ வந்து சேர்ந்தார்‌.

இல்‌லற வாழ்க்கை


சிவவாக்கியர்‌ தமிழ்‌ மண்ணை மிதித்ததும்‌ பிராமணர்‌ முதலான நால்வகை வருணங்களையும்‌ சேர்நத கன்னிப்‌ பெண்களை அணுகி இந்த மண்ணையும்‌ பேய்ச்‌ சுரைக்காயையும்‌ சேர்த்து சமைத்துக்‌ கொடுக்க முடியுமா ? என்று கேட்டார்‌. அப்பெண்கள்‌ அனைவரும்‌ இவரைப்‌ பைத்தியக்காரன்‌ என்று கூறி சிரித்து ஏளனம்‌ செய்தனர்‌. கடைசியாக மூங்கில்‌ வெட்டிக்‌ கூடை முறம்‌ தயாரித்து விற்றுப்‌ பிழைக்கும்‌ ஒரு குறவர்‌ சேரிக்குச்‌ சென்றார்‌. அங்கு ஒரு சிறு குடிசை வாயிலில்‌ நின்று கொண்டிருந்த கள்ளம்கபடமற்ற ஒரு கன்னிப்பெண்‌ இவர்‌ கவனத்தைக்‌ கவர்ந்தாள்‌. அவளைப்‌ பார்த்து, உன்‌ பெற்றோர்‌ வீட்டில்‌ இல்லையா? என்று கேட்டார்‌. அப்பெண்‌, அவர்கள்‌ வீட்டில்‌ இல்லை; எங்கு சென்றார்களோ, தெரியவில்லை என்றாள்‌.

சிவ வாக்கியர்‌ தான்‌ கொண்டு வந்த மண்ணையும்‌ பேய்ச் சுரைக்காயையும்‌ அவளிடம்‌ கொடுத்து “நான்‌ அதிகப்‌ பசியோடு நீண்ட தூரம்‌ நடந்து வந்திருக்கிறேன்‌. நீ இவற்றைச்‌ சமைத்துக்‌ கொடுப்பாயா? என்று கேட்டார்‌. அந்தக்‌ குறப்பெண்‌ அந்த மண்ணை அரிசியாகவே எண்ணி அந்த மண்ணையும்‌ பேய்ச்சுரைக்காயையும்‌ சுவைபட சமைத்து அவருக்கு உணவு படைத்தாள்‌. அவரும்‌ அந்த உணவை அமுதமென சுவைத்து சாப்பிட்டுவிட்டு அந்த வீட்டின்‌ புறத்திலேயே சிறிது நேரம்‌ தங்கியிருந்தார்‌.

அவளுடைய பெற்றோர்‌ வந்தவுடன்‌ அவர்களிடம்‌, நான்‌ உங்கள்‌ பெண்ணை மணம்‌ செய்துகொள்ள வேண்டும்‌ என்பது என்‌ குரு நாதரின்‌ கட்டளை. உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டார்‌. அவர்கள்‌ 'திருமணத்திற்குப்பின்‌ நீங்கள்‌ எங்கள்‌ சேரியிலேயே வாழவேண்டும்‌. சரியென்றால்‌ எங்கள்‌ பெண்ணைக்‌ கொடுக்கிறோம்‌ என்றனர்‌. அவரும்‌ அதற்கு சம்மதித்து அக்குறப் பெண்ணை மணந்து கொண்டு குறவர்‌ தொழிலையே செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்‌. (இச்செய்தி அபிதான சிந்தாமணியிலும்‌ இடம்‌ பெற்றுள்ளது?

பற்றற்ற நிலை


ஒரு நாள்‌ காட்டில்‌ அவர்‌ ஒரு மூங்கில்‌ மரத்தை வெட்டிய போது அதிலிருந்து ஏராளமான தங்கத் துகள்கள்‌ கொட்டின. அவைகளைப்‌ பார்த்து அவர்‌ ஆட்கொல்லி, ஆட்கொல்லி என்று கத்திக்கொண்டு அஞ்சி ஓடினார்‌. அதைக் கண்ட நான்கு பேர் வழிமறித்து, ஏன்‌ இப்படி ஓடுகிறாய்‌? என்று கேட்க அவர்‌ மூங்கிலிலிருந்து ஆட்கொல்லி வெளிப்பட்டது ! என்று பதிலளித்தார்‌. அந்த நால்வரும்‌ சிவவாக்கியரை அழைத்துக் கொண்டு போய்‌ அந்த மூங்கில்‌ மரத்தைப்‌ பார்த்தபோது அதிலிருந்து ஏராளமாகத்‌ தங்கத்‌ துகள்கள்‌ கொட்டியிருக்கக்‌ கண்டனர்‌.

அவர்கள்‌ இதைத்தான்‌ ஆட்கொல்லி என்கிறாயா? என்று கேட்டு அவரை அனுப்பி விட்டு அந்தப்‌ பொன்‌ துகள்கைளை ஒரு மூட்டையாகக்‌ கட்டினர்‌. சூரியன்‌ மறைந்தவுடன்‌ அந்தப்‌ பொன்‌ மூட்டையைத்‌ தூக்கிச்‌ செல்ல முடிவு செய்தனர்‌. அந்த மூட்டையைக்‌ காக்கும்‌ பணியில்‌ இருவர்‌ இருக்க மற்ற இருவரும்‌ நால்வருக்கும்‌ உணவு வாங்கி வரச்‌ சென்றனர்‌. காவல்‌ இருந்தவர்கள்‌ உணவு வாங்கி வரச்‌ சென்றவர்களைக்‌ கிணற்றில்‌ தள்ளிக் கொன்று விடவும்‌, உணவு வாங்கச்‌ சென்றவர்கள்‌, காவல்‌ இருந்தவர்களுக்கு உணவில்‌ விஷம்‌ கலந்து கொடுத்துக் கொன்று விடவும்‌ திட்டமிட்டுச்‌ செயல்பட்டனர்‌. அவர்களின்‌ திட்டப்படி விஷ உணவுடன்‌ வந்தவர்களை காவல்‌ இருந்த இருவரும்‌ கிணற்றில்‌ தள்ளி அவர்கள்‌ மீது பெருங்கல்லைப் போட்டுக் கொன்று விட்டு கடும்‌ பசி மயக்கத்தில்‌ வேக வேகமாக விஷ உணவை உண்டு அழிந்தனர்‌.

கொங்கணவர் நட்பு


ஒரு நாள்‌ சிவவாக்கியர்‌ கீரை பறித்துக் கொண்டிருந்த போது அவரது தவ ஒளியால்‌ ஈர்க்கப்பட்டு வான்வழியே சென்ற கொங்கணவர்‌ அவரிடம்‌ வந்து அளவளாவிச்‌ சென்றார்‌. பின்‌ ஒரு நாள்‌ கொங்கணவர்‌ அவர்‌ வீட்டிற்கு வந்த போது சிவ வாக்கியர்‌ வீட்டில்‌ இல்லை. தனித்திருந்த அவர்‌ மனைவியிடம்‌ வீட்டில்‌ கிடந்த பழைய இரும்புத்‌ துண்டுகளைக்‌ கொண்டு வரச்‌ சொன்னார்‌. அவைகளையெல்லாம்‌ தங்கமாக்கிக்‌ கொடுத்து விட்டுச்‌ சென்றார்‌. வீட்டுக்கு வந்த சிவவாக்கியர்‌ தன்‌ மனைவியிடம்‌ ஆட்கொல்லியான அந்தத்‌ தங்கத்‌ துண்டுகளை யெல்லாம்‌ கிணற்றில்‌ எறிந்து விடச்‌ சொன்னார்‌. அப்புனிதவதியும்‌ எவ்வித மனச்‌ சலனமுமின்றி அவைகளைக்‌ கொண்டு போய்‌ ஊர்ப் புறத்திலுள்ள பாழுங்கிணற்றில்‌ போட்டு விட்டாள்‌. அதன் பின்‌ சிவவாக்கியர்‌ ஒரு பாறையின் மேல்‌ சிறுநீர்‌ கழித்து விட்டு வந்து மனைவியிடம்‌, இப்பாறை மேல்‌ தண்ணீர்‌ ஊற்று என்றார்‌, அவள்‌ தண்ணீர்‌ ஊற்றியவுடன்‌ பாறை தங்கமாக மாறியது. இத் தங்கத்தையெல்லாம்‌ எடுத்துக் கொள்‌ என்று அவர்‌ கூற அவர்‌ மனைவி <>தங்களுக்கு வேண்டாதது எனக்கு எதற்கு? என்று கூறி மறுத்து விட்டாள்‌. அக்குற மகளுடன்‌ ஏழு ஆண்டுகள்‌ குடும்பம்‌ நடத்திவிட்டு. இல்லறத்தை துறந்து பற்றற்ற துறவியாக வாழத்‌ தொடங்கினார்‌.

துறவு வாழ்க்கை


சிவ வாக்கியர்‌ ஊர்‌ ஊராய்ச்‌ சுற்றி மக்கள்‌ குறைகளைத்‌ தீர்த்து வந்தார்‌. தங்கம்‌ தயாரிக்கும்‌ முறையைக்‌ கற்றுக்கொள்ளும்‌ ஆசையில்‌ பலரும்‌ அவரிடம்‌ சீடராக வந்தனர்‌. அப்போது இந்த உலகியல்‌ இன்பங்கள்‌ எல்லாம்‌ அற்பமானவை என்று உணர்வாய்‌. முக்தி என்னும்‌ உண்மையான ஆன்ம விடுதலை வேண்டுமா? தொடர்ந்து வரும்‌ பிறவித்‌ துன்பங்களுக்குக்‌ காரணமான சரீர சுகம்‌ வேண்டுமா? என்று கேட்டார்‌. அந்த சீடனும்‌ <>எனக்கு ரசவாதமும் வேண்டாம்‌; தங்கமும்‌ வேண்டாம்‌, சமாதி கூடி சித்தி பெற அருள் புரியுங்கள்‌' என்று வேண்டி முக்தி தரும்‌ சித்தர் வழியில்‌ செல்லத்‌ தொடங்கினான்‌. பின்னர்‌ பல சீடர்களும்‌ வந்து அவரிடம்‌ தீட்சை பெற்று சித்தி அடைந்தார்கள்‌.

சமாதி கூடல்‌


இவ்வாறு பல ஊர்களுக்கும்‌ தவ யாத்திரையாக சென்றார்‌. ஒவ்வொரு ஊரிலும்‌ தவக் குடில்கள்‌ அமைத்துக் கொண்டு தவயோகம்‌ பயின்று வந்தார்‌. அவ்வாறு அவர்‌ தங்கி வாழ்ந்த ஊர்களில்‌ சிவன்‌ மலையும்‌ ஒன்று. இத்தலத்தில்‌ அவர் முன்‌ முருகப் பெருமான்‌ தோன்றி அருளாசி வழங்கியதாகக்‌ கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக இந்த சிவன்‌ மலையில்‌ சிவவாக்கியர்‌ குகை ஒன்றும்‌ உள்ளது. இம்மலை உச்சியில்‌ முருகன்‌ கோவிலும்‌ மலை அடிவாரத்தில்‌ ஒரு சிவன்‌ கோவிலும்‌ (நஞ்சண்டேஸ்வரர்‌ திருக்கோவில்‌) உள்ளன. இவ்வாறு பல ஊர்களுக்கும்‌ சென்று தவ வாழ்க்கையும்‌ சிவ வழிபாடும்‌ செய்து வந்தார்‌. ஒவ்வொரு ஊரிலும்‌ மக்களுக்குப்‌ பிணி நீக்கல்‌ முதலான பல தொண்டுகளும்‌ செய்து வந்தார்‌. கடைசியில்‌ குடந்தை மாநகரை அடைந்து அங்கேயே சமாதி பூண்டார்‌. இன்றும்‌ ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்றும்‌ குடந்தையில்‌ உள்ள அவரது சமாதி பீடத்திற்கு பூசைகள்‌ நடைபெற்று வருகின்றன.


22/9/18

இராமதேவர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. நாகையில்‌ சட்டை நாதர் பிரதிஷ்டை
  3. இராமதேவர் மெக்கா செல்லல்‌
  4. மெக்காவில்‌ இராமதேவர்‌
  5. 40 வருடக்கடுந்தவம்‌
  6. ஜீவ சமாதி்‌

முன்னுரை - ‌தோற்றம்


‌ இராமதேவர்‌ நாகைப்பட்டினத்தைச்‌ சேர்ந்தவர்‌. அவர்‌ புலத்தியரின்‌ சீடர்‌ என்பதை பரிபாஷை விளக்கம்‌ இருபத்தேழு என்ற நூலின்‌ காப்புச்‌ செய்யுளில்‌

குண்டலிதான்‌ பூண்ட புலத்தியர்தன்‌ பாதம்‌ குருமொழிதான்‌ ஆயிரத்தின்‌ பீடம்போற்றி
என்று தெளிவாகப்‌ பாடியுள்ளார்‌.

இவர்‌ வைணவ பிராமண குலத்தில்‌ மாசி மாதம்‌ பூரம்‌ நட்சத்திரம்‌ இரண்டாம் பாதத்தில் ‌(சிம்ம ராசியில்‌) பிறந்தவர்‌ என்று போகர்‌ போகர்‌ 7000 என்ற நூலில்‌ கூறியுள்ளார்‌. குருவருளால்‌ இவர்‌ குண்டலினி யோகம்‌ செய்து மகாசக்தியாகிய மனோன்மணி தன்னுள்‌ இருந்து தன்னை வழி நடத்திச்‌ செல்வதை உணர்ந்தவர்‌. அவர்‌ இராமதேவர்‌ பூஜா விதி என்ற சிறு நூலின்‌ காப்புச்‌ செய்யுளை

ஆதியென்ற மணிவிளக்கை அறியவேணும்‌ அகண்ட பரிபூரணத்தைக்‌ காணவேணும்‌

எனத்தொடங்கி அதில்‌ வாலைத்‌ தெய்வத்தின்‌ வழிபாட்டு மந்திரம்‌. வாசியோகம்‌, சாகாக்கலை ஆகியவற்றை விளக்கியுள்ளார்‌. அதில்‌ இறைவனுக்கு செய்யும்‌ பூஜைகள்‌ வீண்‌ போகா என்று உறுதிபடக்‌ கூறியுள்ளார்‌.

நாகையில்‌ சட்டை நாதர் பிரதிஷ்டை


அவரது உள்ளத்தில்‌ காசி விஸ்வநாதரை தரிசிக்கவேண்டும்‌ என்ற பேரவா எழுந்தது தன்னை மறந்து நடைப்பயணமாகவே காசி சென்றடைந்தார்‌. அங்கே விஸ்வநாதரை மனமுருகத் தொழுதுவிட்டு வந்து கங்கையில்‌ மூழ்கிய போது அவர்‌ கையில்‌ சட்டை நாத சுவாமியின்‌ விக்ரகம்‌ கிடைத்தது. அந்த லிங்கத்தைக்‌ கொண்டு வந்து நாகையில்‌ பிரதிஷ்டை செய்ய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ எழவே சற்றும்‌ தாமதிக்காது உடனே விண்‌ வழியே நாகை வந்து அதைப்‌ பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தார்‌.

சட்டை நாதர்‌ அருளால்‌ அவருக்கு பல்வேறு சித்திகளும்‌ சித்தர்களின்‌ தொடர்பும்‌ கிடைத்தன. அந்த சட்டை நாதர்‌ இப்போது நாகையில்‌ நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி கோவிலின்‌. தென்மேற்கில்‌ ஒருகல்‌ தொலைவில்‌ தனிக் கோவில்‌ கொண்டு அருள்மிகு சட்டையப்பராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌.

இராமதேவர் மெக்கா செல்லல்‌


இராமதேவர்‌ முகம்மதியராக மாறியபிறகு யோகோபு வைத்திய வாத சூத்திரம்‌ என்ற நூலை எழுதியுள்ளார்‌. தான்‌ மெக்கா சென்றதற்கான முக்கிய காரணத்தை அதில்‌ அவர்‌ விளக்கியுள்ளார்‌.

அக்காரணமாவது

இராமதேவர்‌ கைலாச சட்டை நாதர்‌ தீட்சை இருநூறு என்ற நூலை எழுதி முனிவர்களின்‌ தலைவரான திருமூலரிடம்‌ கொடுத்தார்‌. திருமூலர்‌ அதைக் கிழித்தெறிந்தார்‌. அப்போது அங்கிருந்த அகத்தியர்‌ முதலான முனிவர்கள்‌ இதை ஏன்‌ கிழித்தீர்‌? எனக்கேட்க திருமூலர்‌ பதில்‌ ஏதும்‌ கூறவில்லை. அடுத்து இராமதேவர்‌ அதே வினாவை விடுத்த போது நீ கேட்க வேண்டா. மேட்டினம்‌ பேசாதே. போ,போ! என்று கடிந்து கொண்டார்‌.

அப்போது அரபு நாட்டு வணிகர்கள்‌ அடிக்கடி கப்பலில்‌ நாகைக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர்‌. அப்போது அரபு நாட்டுப்‌ பாலை நிலத்தில்‌ அபூர்வமான கல்ப மூலிகைகள்‌ நிறைய வளர்ந்திருந்தன என்று பல சித்தர்கள்‌ இராம தேவரிடம்‌ கூறியிருந்தனர்‌. இவ்விரு காரணங்களாலும்‌ எப்படியும்‌ மெக்கா சென்று வர வேண்டும்‌ என்ற எண்ணம்‌ சித்தர்‌ மனதில்‌ ஆழப்‌பதிந்தது. ஒரு நாள்‌ அதே எண்ணத்தில்‌ இராமதேவர்‌ தன்னை மறந்த நிலையில்‌ தியானத்தில்‌ ஆழ்ந்தார்‌. தியான நிலை கலைந்து விழித்து பார்த்த போது தான்‌ அறியாமலே அவர்‌ மெக்கா வந்திருப்பதை உணர்ந்தார்‌.

மெக்காவில்‌ இராமதேவர்‌


மெக்கா மக்கள்‌ எல்லோரும்‌ இஸ்லாமியர்‌. திடீரென்று வேற்று நாட்டைச்‌ சேர்ந்த முஸ்லீம்‌ அல்லாத ஒருவரைக் கண்ட அம்மக்கள்‌ இராமதேவரைப்‌ பார்த்து நீ யார்‌ எப்படி எங்கள்‌ ‌ நாட்டிற்கு வந்தாய்‌? உன்னைக்‌ கொன்றுவிடுவோம்‌ என்று பயமுறுத்தினர்‌. நான்‌ ஒரு தவயோகி. இங்கு நான்‌ எப்படி வந்தேன்‌ என்பது எனக்கே தெரியவில்லை என்று இராம தேவர்‌ கூற அங்கிருந்த முஸ்லிம்‌ ஞானி ஒருவர்‌ இவர்‌ கூறுபவை எல்லாம்‌ உண்மை என்று கூறினார்‌.

மெக்கா மக்கள்‌ உன்னை நாங்கள்‌ நம்புகிறோம்‌. நீ முஸ்லீமாக மாறினால் தான்‌ எங்கள் நாடடில்‌ வாழ முடியும்‌ என்று கூறினர்‌. இராமதேவர்‌ முஸ்லீமாக மாறி யாக்கோபு என்ற புதியபெயருடன்‌ அந்த மக்களுடன்‌ ஒன்றுபட்டு வாழ்ந்தார்‌. அம்‌மக்களுக்கு உபதேசம்‌ செய்தல்‌, மருத்துவம்‌ பார்த்தல்‌ போன்ற பல வழிகளில்‌ உதவி செய்து மெக்கா மக்கள்‌ பேரன்புக்குப்‌ பாத்திரராகி நீண்ட காலம்‌ அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார்‌. இந்தச்‌ செய்திகள்‌ யாவும்‌ போகர்‌ 7000 என்ற நூலில்‌ இடம் பெற்றுள்ளன.

ஒரு நாள்‌ நபிகள்‌ நாயகம்‌ ஒளி உருவில்‌ யாகோபுக்குக்‌ காட்சியளித்து தெய்வீக சாதனைகள்‌ புரியும்‌ நுட்பங்களை விளக்கி அருளினார்‌. பின்னர்‌ மகாசித்தரான போகர்‌ அவர் முன் தோன்றி கொஞ்ச காலம்‌ மக்கள்‌ தொண்டு செய்து விட்டு ஜீவ சமாதி அடையும்படி கூறி மறைந்தார்‌. போகர்‌ கூறிய படி மக்கள்‌ தொண்டு செய்து வந்த யாகோபு சித்தர்‌ காற்றையே உடலாகக்‌ கொண்ட காலங்கி நாதரின்‌ ஆசிபெற விரும்பி அவரை நினைத்து கடுந்தவம்‌ புரிந்தார்‌. காலாங்கிநாதர்‌ அருளுடலுடன்‌ தோன்றி, ஜீவசமாதி கூடி மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ வாழ்த்துரை கூறி மறைந்தார்‌. யாகோபு சித்தரும்‌ ஜீவ சமாதி கூடி தவம்புரியத்‌ தொடங்கினார்‌.

40 வருடக்கடுந்தவம்‌


அவர்தம்‌ சீடர்களை அழைத்து நான்‌ பூமிக்கடியில்‌ தவம்‌ செய்யப்‌ போகிறேன். பத்து ஆண்டுகள்‌ கழித்து தான்‌ வெளிப்‌படுவேன்‌. என்று கூறி ஒரு குழிதோண்டி அதில்‌ இறங்கி சமாதி பூண்டார்‌. சில நாட்களில்‌ அவருடைய சீடர்கள்‌ எல்லோரும்‌ யாகோபு இறந்து விட்டார்‌. இனிமேலா வெளியில்‌ வரப்போகிறார்‌? என்று கேலியாகப்‌ பேசிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றனர்‌. காலப்போக்கில்‌ அவர்களில்‌ சிலர்‌ இறந்து விட்டனர்‌. பலர்‌ வாழ்ந்து கொண்டிருந்தனர்‌. ஒரே ஒரு சீடர் மட்டும்‌ குரு மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையுடன்‌ 10 ஆண்டுகளும்‌ அவருடைய சமாதிக்கு அருகிலேயே தங்கியிருந்து தவ வழிபாடு செய்து வந்தார்‌.

யாகோபு, தாம்‌ குறிப்பிட்டு சொன்னது போல்‌ பத்தாண்டு முடிவில்‌ சமாதி கலைந்து வெளியே வந்தார்‌.அவர்‌ வெளிப்பட்டதும்‌

அங்கேயே தங்கியிருந்த சீடர்‌ குருவிடம்‌ நடந்தவைகளை யெல்லாம்‌ கூறினார்‌. அவற்றைக் கேட்ட குருநாதர்‌, 'நான்‌ மீண்டும்‌ சமாதி கூடிச் செல்கிறேன்‌. திரும்பி வர முப்பதாண்டுகள்‌ ஆகும்‌. நான்‌ சமாதிக்குள்‌ போனவுடன்‌ என்னை கேலி பேசியவர்கள்‌ எல்லோரும்‌ கண்கள்‌ குருடாகி விடுவார்கள்‌ என்று கூறிவிட்டு மறுபடியும்‌ சமாதிக்குள்‌ சென்றுவிட்டார்‌. அவர்‌ சமாதி கூடிய அதே நேரத்தில்‌ கேலி செய்த சீடர்கள்‌ யாவரும்‌ குருடராயினர்‌. இம்முறை அவர்கள்‌, தாங்கள்‌ செய்த குற்றங்களை உணர்ந்து திரும்பிவந்து சமாதிக்கு அருகிலேயே குரு வழிபாடு செய்து கொண்டிருந்தனர்‌. முப்பதாண்டு கழித்து வெளிப்பட்ட குருநாதர்‌ அவர்கள்‌ செய்த குற்றங்களை மன்னித்தார்‌. சீடர்கள்‌ யாவரும்‌ கண்பார்வை பெற்றனர்‌. யாகோபு அவர்களுடன்‌ சில காலம்‌ தங்கியிருந்து அவர்களுக்குப்‌ பல உபதேசங்களைச்‌ செய்ததுடன்‌ பல மருத்துவ நூல்களையும்‌ எழுதிக் கொடுத்து விட்டுத்‌ தமிழகம்‌ வந்தார்‌.

ஜீவ சமாதி


தமிழகம்‌ வந்த யாகோபு மீண்டும்‌ இராமதேவராக மாறி சதுரகிரி மலைப்பகுதியில்‌ உள்ள ஒருவனத்தில்‌ தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்‌. அக்காலத்தில்‌ தாம்‌ அரபு மொழியில்‌ எழுதிய மருத்துவ நூல்களை எல்லாம்‌ தமிழில்‌ மொழி பெயர்த்தார்‌. அவர்‌ தங்கியிருந்த வனம்‌ இராமதேவர்‌ வனம்‌ என்றே அழைக்கப்படுகிறது. அவருக்கு நிரந்தரமாக ஜீவசமாதி கூடும்‌ காலம்‌ நெருங்கி விட்டதை உணர்ந்தார்‌. உடனே அவர்‌ சதுர கிரியைவிட்டு அழகர்‌ மலைக்குச்‌ சென்றடைந்து அம் மலைமேல்‌ ஜீவசமாதி அடைந்தார்‌. அவர் ஜீவசமாதி அடைந்தவிடத்தில் தான்‌ இப்போது! பழமுதிர்ச்சோலை முருகன்கோயில்‌ உள்ளது. அந்த முருகன்‌ கோவிலில்‌ சித்தர்பிரான்‌ இராமதேவர்‌ அருள்மிகு முருகக்‌ கடவுளாக இருந்து அருளாட்சி புரிந்து வருகிறார்‌.


21/9/18

இடைக்காடர்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. இடைக்‌காடரும் நவநாத சித்தரும்
  3. போகரும் இடைக்காடரும்
  4. திருமாலின் அவதாரம்
  5. வாழ்ந்த காலம்
  6. 12 ஆண்டு கடும்‌ பஞ்சம்
  7. 12 வருடங்கள்‌ கடந்த பின்
  8. தவ வாழ்க்கை பற்றி இடைக்காடர்‌
  9. மக்கள்‌ வழிபாடு பற்றி இடைக்காடர்
  10. அவர்‌ சமாதி பற்றிய கருத்து
  11. அமைந்துள்ள இடம்

முன்னுரை


பன்னெடுங்காலமாக திருவண்ணாமலையில்‌ அருணாசலேஸ்வரராக இருந்து அருளாட்சி செய்து வரும்‌ மகாசித்தர்‌ இடைக்காடர்‌. திருப்பதியில்‌ கொங்கணவர்‌ வேங்கடவனாய்‌ இருந்து வரையாது செல்வ வளத்தை வழங்கிக்‌ கொண்டிருப்பது போல்‌ இடைக்காடர்‌ திருவண்ணாமலையில்‌ எண்ணற்ற சித்தர்கள்‌ தோன்றி மக்களிடையே அருள்‌ நெறியை இந்த நில உலகம்‌ உள்ள வரை பரப்பிக் கொண்டிருக்க வழியமைத்து வருகிறார்‌. பதினெண்‌ சித்தர்களின்‌ சமாதிக்‌ கோவில்களில்‌ அருணாசலேஸ்வரர்‌ கோவிலிலுள்ள அண்ணாமலையார்‌ பாதம்‌ என்ற வழிபாட்டிடமே இடைக்காடர்‌ சமாதிகொண்டுள்ள இடம்‌ என்பது பெரும்பாலோர்‌ கருத்து.

இடைக்‌காடரும் நவநாத சித்தரும்


நவநாத சித்தர்கள்‌ இடைவிடாது நாதோபாசனை செய்து கொண்டு சதாசர்வ காலமும்‌ உருவமற்றவர்களாக விண்வெளியில் ‌சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்கள்‌. ஒரு சமயம்‌ அவர்களில்‌ ஒருவருடைய அருட்கடாட்சம்‌ இடைக்காடர்‌ மேல்‌ பட்டது. அப்போது இடைக்காடர்‌ ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவன்‌. தொண்டை மண்டலத்தில்‌ திருவண்ணாமலைப் பகுதியில்‌ உள்ள இடையன்திட்டு என்ற பகுதியில்‌ வாழ்ந்து வந்தார்‌. தினமும்‌ மலைச்சாரலில்‌ உள்ள இடையன்மேடு என்ற பகுதியில்‌ ஆடுகளை மேயவிட்டு காலை முதல் மாலை வரை ஆட்டோடும் கோலைத் தரையில் பிடித்த வண்ணம் நின்ற திருக்கோலத்தில் தவம்‌ செய்து கொண்டிருப்பது அவர்‌ வழக்கம்‌. அப்போது அவருடைய உடல்‌ பூமியில்‌ இருந்தாலும்‌ அவரது மனம்‌ மட்டும்‌ பிரம்மத்தை நாடி விண்வெளியில்‌ அலைந்து கொண்டிருக்கும்‌. இந்த நிலையில்‌ அவரைப்‌ பல நாள்‌ பார்த்துக்கொண்டு விண்வெளியில்‌ சென்று கொண்டிருந்த அந்த நவநாதசித்தர்‌ இவருடைய பிரம்மோபசனையால்‌ ஈர்க்கப்பட்டு ஒருநாள்‌ பூமியில்‌ இறங்கி இடைக்காடர்‌ முன்‌ நின்றார்‌. இடைக்காட்டு முனிவரும்‌ அந்த விண்ணக சித்தரின்‌ தெய்வீக சக்தியால்‌ உந்தப்பட்டு கண்விழித்துப்‌ பார்த்தார்‌. அப்பொழுது நவநாத சித்தருக்கு அருந்த ஆட்டுப்பால்‌ கொடுத்து உபசரித்தார்‌. அதனால்‌ அகம்‌ மகிழ்ந்த நவநாத சித்தர்‌ இவருக்கு மானசீக தீட்சையாக பிரம்மோபதேசம்‌ செய்து விட்டு மறைந்தார்‌. அது முதல்‌ இவர்‌ கவிபாடும்‌ திறம் பெற்ற மகாசித்தராக விளங்கினார்‌. இந்த செய்தி அபிதான சிந்தாமணியிலும்‌ காணப்படுகிறது.

போகரும் இடைக்காடரும்


பல சித்த இலக்கியங்களில்‌ இவர்‌ போகரின்‌ சீடர்‌ என்ற குறிப்பே காணப்படுகிறது. இவர்‌ போகரின்‌ சீடர்களில்‌ ஒருவர்‌ என்பது போகரின்‌ வாழ்க்கை வரலாற்றிலிருந்தும்‌ தெரிய வருகிறது. இந்தக்‌ கருத்தே மிகவும்‌ நம்பத்தகுந்ததாகவும்‌ உள்ளது. இக் கருத்துப்படி ஒரு நாள்‌ போகசித்தர்‌ விண்வழியே போய்க் கொண்டிருந்த போது, சிறுவனாகிய இடைக்காடனின்‌ தவத்தால்‌ ஈர்க்கப்பட்டு பூமிக்கு வந்து கொஞ்சம்‌ நாள்‌ இடைக்காடருடனிருந்து அவருக்கு சித்த வித்தைகளைக்‌ கற்றுக்கொடுத்தார்‌. போகரிடமிருந்து மருத்துவம்‌, வானியல்‌, சோதிடம்‌, முதலியவற்றையும்‌ இவர்‌ முழுமையாகக்‌ கற்றுத்‌ தேர்ந்தார்‌. அவை பற்றி பல நூல்களும்‌ இவர்‌ எழுதியுள்ளார்‌. அவைகளில்‌ இவர்‌ எழுதிய சாரீரம்‌ என்ற மருத்துவ நூல்‌ மிகவும்‌ சிறந்த நூலாகக்‌ கருதி போற்றப்பட்டு வருகிறது.

திருமாலின் அவதாரம்


இடைக்காடர்‌ திருமாலின்‌ அவதாரம்‌ என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. ஒரு சமயம்‌ விஷ்ணு பக்தர்கள்‌ பலர்‌ இவரிடம்‌ வந்து, திருமாலின்‌ பத்து அவதாரங்களில்‌ எந்த எந்த அவதார மூர்த்திகளை வழிபட்டால்‌ விரைவில்‌ நன்மைகள்‌ கிட்டும்‌ என்று கேட்டனர்‌. அவர்களிடம்‌ ஏழை, இடையன்‌, இளிச்ச வாயன்‌ ஆகிய மூவருக்கும் விழாக்கள் எடுத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு எல்லா வளங்களும் கிட்டும் என்று கூறினார். இவைகளில் ஏழை என்ற சொல் இராமாவதாரத்தையும் இடையன் என்ற சொல் கிருஷ்ணாவதாரத்தையும் இளிச்சவாயன் என்ற சொல் நரசிம்ம அவதாரத்தையும் குறிப்பனவாகும். மேலும் இவர் இடையர் குலத்தில் பிறந்தவர். பிறவியிலேயே கருவில் திருவுடையவராக விளங்கிய சித்தர். இவருடைய சித்தர் பாடல்களில் தாண்டவக்கோனே கோணரே என்று கோகுலே வாசனை விழித்துப் பாடும் கண்ணிகளும் உள்ளன. இவைகள்‌ யாவும்‌ இவரைத்‌ திருமாலின்‌ அவதாரமாகவே மக்கள்‌ கருதினர்‌ என்பதை உறுதி செய்கின்றன.

வாழ்ந்த காலம்


இடைக்காடர்‌ கடைச்சங்க காலத்தில்‌ வாழ்ந்தவர்‌. புறநானூற்றிலும்‌ (எ.கா. வாகைத்‌ திணையில்‌ 42 ஆம்‌ பாடல்‌), நற்றிணை முல்லைத்‌ திணையிலும்‌, குறுந்தொகையிலும்‌ அவர்‌ பாடல்கள்‌ இடம்பெற்றுள்ளன. திருவள்ளுவ மாலை அவரால்‌ பாடப்பட்ட சங்க காலத்‌ தனி நூல்‌.
நற்றினை 142 ஆம்‌ பாடலில்‌

ஆயன்‌ மழையில்‌நனைந்தபடியே ஊன்று கோல்மேல்கால்வைத்து நின்று கொண்டு ஆட்டை அழைக்கஒரு பாடல்‌ பாட, அதைப்பார்த்து ஆட்டைக்‌ கவரவந்த நரி பயந்தோடும்‌

என்று கூறும்‌ அடிகள்‌ கருத்துச்‌ சுவையும்‌ கவி நயமும்‌ மிக்கவை.

கடுகைத்துளைத்து எழுகடலைப்‌ புகட்டி குறுகத்தரித்த குறள்‌

என்று திருக்குறளின்‌ பெருமையை கடைச்சங்க காலப்‌ புலவர்களிடையே எடுத்துக்கூறிய பெரும்‌ புலவர்‌ இவர்‌. இவர்‌ தமிழ்ச்சங்கம்‌ (கடைச்சங்கம்‌) அழிந்து போகச்‌ சாபம்‌ கொடுத்தாரென்றும்‌, குளமுற்றத்‌ துஞ்சிய கிள்ளி வளவனைப்‌ பாடியுள்ளார்‌ என்றும்‌ கபிலரின்‌ சமகாலத்தவர்‌ என்றும்‌ தெரியவருகிறது.

வாழ்ந்த பகுதி


இவர்‌ பல சான்றோர்களை ஈன்றெடுத்த தொண்டை நாட்டில்‌ திருவண்ணாமலைப் பகுதியில்‌ உள்ள இடையன்‌ திட்டு என்ற ஊரைச்‌ சேர்ந்தவர்‌. இடையர்‌ குலத்தில்‌ பிறந்த இவர்‌ சிறுவயதில்‌ ஆடு மேய்ப்பதையே தொழிலாகக்‌ கொண்டிருந்தார்‌. பெரிய சித்தராக மாறி இயற்கையையே கட்டுப்‌படுத்தும்‌ அளவிற்கு தவவலிமை பெற்றிருந்தவர்‌. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்‌ கோவிலில்‌ சமாதி கொண்டுள்ளார்‌.

இவர்‌ மதுரைக்குக்‌ கிழக்கிலுள்ள இடைக்காட்டில்‌ பிறந்தவராகவோ மலையாளப்‌ பகுதியில்‌ உள்ள இடைக்காடு என்னும்‌ ஊரில்‌ தோன்றியவராகவோ இருக்கக்‌கூடும்‌ என்ற கருத்தும்‌ நிலவுகிறது. இவைகளை உறுதிசெய்யப்‌ போதிய ஆதாரங்கள்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை.

12 ஆண்டு கடும்‌ பஞ்சம்‌


அவர்‌ தன்‌ சோதிட ஞானத்தைக்‌ கொண்டு விரைவில்‌ 12 ஆண்டுகள்‌ மழை பெய்யாது நாடே பசியாலும்‌ பஞ்சத்தாலும்‌ அழியப்‌ போகிறது. மனித இனம்‌ மட்டுமல்லாது ஆடு மாடுகளும்‌ மரம்‌ செடிகொடிகளும்‌ பாலை நிலமாக மாறப்‌ போகிறது' என்று கண்டுணர்ந்தார்‌. அந்தப்‌ பஞ்சத்தில்‌ தன்‌ ஆடுகளை எப்படியும்‌ காப்பாற்ற வேண்டும்‌ என்று முடிவுசெய்தார்‌. அதன்‌ விளைவாக பாலை வனப்பகுதிகளிலும்‌ வற்றாது காடாக வளர்ந்திருக்கும்‌ எருக்கன்‌ செடிகளின்‌ இலை தழைகளை மட்டும்‌ தன்‌ ஆடுகளுக்கு உணவாகக்‌ கொடுத்தார்‌. மற்ற எந்த மரம்‌ செடி கொடிகளையும்‌ அவற்றின்‌ கண்களுக்கே காட்டாது வளர்த்தார்‌. வறட்சியிலும்‌ வளர்ந்து பலன்தரக்கூடிய குறுவரகு என்ற தானியத்தை சேற்றில்‌ கலந்து சுவர்‌ எழுப்பித்‌ தன்‌ குடிலை அமைத்துக் கொண்டார்‌. தன்‌ குடிலைச்‌ சுற்றி குறுவரகு கலந்த மண்‌ சுவரை எழுப்பிக் கொண்டார்‌.

எருக்கிலையை மட்டுமே உணவாக உண்டு வந்த ஆடுகளுக்கு எருக்கிலையின்‌ நச்சுத்தன்மையால்‌ உடல்‌ முழுவதிலும்‌ நமைச்சல்‌ ஏற்பட்டது. அரிப்பு வரும் போதெல்லாம்‌ அந்த ஆடுகள்‌ தங்கள்‌ முதுகுகளை அந்த சுவர்களில்‌ தேய்த்துக் கொண்டன. அப்போது மண்ணுடன்‌ சேர்ந்து உதிர்ந்த குறுவரகை சுத்தம்‌ செய்து அதையே இடைக்காடர்‌ உணவாகக்‌ கொண்டார்‌. தன்‌ விருந்தினர்களுக்கும்‌ குறுவரகுப்‌ பண்டங்களையும்‌ ஆட்டுப்‌ பாலையுமே கொடுத்து உபசரித்தார்‌.

அவர்கள்‌ இந்த உணவுமுறைக்குப்‌ பழகிப் போவதற்கும்‌ பஞ்சம்‌ தொடங்குவதற்கும்‌ காலம்‌ சரியாக அமைந்துவிட்டது. அந்தப்‌ பஞ்சத்தில்‌ மனிதர்களும்‌ மாண்டழிந்தனர்‌. ஆடு, மாடுகளும்‌ மரம்‌,செடி,கொடிகளும் கூட அறவே பட்டொழிந்தன. இடைக்‌ காடரும்‌ அவருடைய ஆடுகளும்‌ மட்டுமே உயிர்‌ வாழ்ந்து கொண்டிருந்தனர்‌.

12 வருடங்கள்‌ கடந்த பின்


12 வருடங்கள்‌ கடந்த பின்‌ ஒரு நாள்‌ பூமியைச்‌ சுற்றிப்‌ பார்த்துக்‌ கொண்டு வான்வெளியில்‌ போய்க்கொண்டிருந்த நவக்கிரக நாயகர்கள்‌ பூமியில்‌ காணும்‌ இடமெங்கும்‌ உயிரற்ற வறண்ட பாலைவனமாக உள்ள போது இடைக்காடரும்‌ அவருடைய ஆடுகளும்‌ எப்படி உயிர் வாழ்கின்றனர்‌? என்பதைத்‌ தெரிந்துகொள்ள இடைக்காடர்‌ குடிசையின்‌ முன்‌ விண்ணிலிருந்து இறங்கினர்‌. இடைக்காடர்‌ அவர்களுக்குத்‌ தாராளமாக குறுவரகுப்‌ பண்டமும்‌ ஆட்டுப்‌ பாலும்‌ கொடுத்து உபசரித்தார்‌. எருக்கிலைகளை மட்டுமே உண்டு வளர்ந்த அந்த ஆடுகளின்‌ பாலில்‌ எருக்கன்‌ செடிக்குரிய நச்சுத் தன்மை நிறைந்திருந்ததால்‌ ஆட்டுப்‌ பாலைக் குடித்த நவக்கிரக நாயகர்கள்‌ தூக்க மயக்கம்‌ போதை மயக்கம்‌ இரண்டும்‌ சேர சாப்பிட்ட களைப்பில்‌ படுத்து மெய்மறந்து தூங்கிவிட்டனர்‌. இடைக்காடர்‌ தன்‌ சோதிட ஞானத்தையும்‌ தவ வலிமையையும்‌ கொண்டு, தூக்க மயக்கத்தில்‌ தம்மை மறந்து கிடந்த நவக்கிரக நாயகர்களை, நல்ல மழை பொழிவதற்கு ஏற்ற வகையில்‌ இடம்‌ மாற்றிப்‌ படுக்க வைத்தார்‌. நாயகர்கள்‌ இடம்‌ மாறியதற்கு ஏற்ப பூமியைச்‌ சூழ்ந்து விண்வெளியில்‌ அமைந்துள்ள துவாதச மண்டலத்தில்‌ நவக்கிரகங்களும்‌ இராசிகள்‌ மாறி அமைந்தன. சிறிது நேரத்திலேயே வானத்தில்‌ கருமேகம்‌ சூழ்ந்திட பூமியின்‌ மேல்‌ இடிமுழக்கத்துடன்‌ பெருமழை பெய்ந்தது. வறண்டிருந்த பூமி வெள்ளக்காடாக மாறியது.

திடீரென்று ஏற்பட்ட குளிரால்‌ உந்தப்‌ பட்டு விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள்‌ தாங்கள்‌ ஒன்பது பேரும்‌ இடம்‌ மாறி இருந்ததையும்‌ பாலைவனச்‌ சுற்றுச்‌ சூழல்‌ சோலைவனமாக மாறி இருந்ததையும்‌ கண்டு ஆச்சரியக்‌ களிப்பில்‌ ஆழ்ந்தனர்‌. சித்தர்களுக்குப்‌ பிறகு தான்‌ தெய்வங்கள்‌ எல்லாம்‌ என்பதை உளமாற உணர்ந்தனர்‌. அவர்கள்‌, இந்த மாமனிதர்‌ மக்கள்‌ நலத்திற்காக மாமழை பொழியவைத்த மெய்ஞ்ஞானி. இந்தப்‌ பேரருளாளர்‌ உலகம்‌ உள்ளளவும்‌ விண்ணவர்‌ போற்றுதலுக்கும்‌ மக்கள்‌ வழிபாட்டிற்கும்‌ உரிய பெருந்தெய்வமாயிருந்து தீப வடிவத்தில்‌ தரிசனம்‌ கொடுத்த வண்ணம்‌ அருளாட்சி செய்து வருவாராக என்று இடைக்காடரை வாழ்த்தி விட்டு விண்ணகம்‌ ஏகினர்‌. அவர்‌ இன்றும்‌ அருணாசலத்‌ தீபமாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌.

தவ வாழ்க்கை பற்றி இடைக்காடர்‌


முதலில்‌ அவர்‌ சூனியமே பரம்பொருள்‌ என்பதை உணர வேண்டும்‌. இல்லையேல்‌ ஆன்மா பிரம்ம நிலைக்கு உயர வேறு வழியே இல்லை என்கிறார்‌.

வானியல்போல வயங்கும்‌ பிரமமே சூனியம்‌ என்றறிந்து ஏத்தாக்கால்‌ ஊனியல்‌ ஆவிக்கொரு கதியில்லையென்று ஓர்ந்து கொள்வீர்‌ நீர்‌ கோனாரே.

அடுத்ததாக எல்லாமாகவும்‌ ஒன்றுமே இல்லாத வெட்ட வெளியாகவும்‌ உள்ள அந்தப்‌ பரம்பொருளை அல்லும்‌ பகலும்‌ மனதில்‌ இருத்தித்‌ தவம்‌ புரிந்தால்‌ மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழலாம்‌. இதற்கு மந்திரம்‌ எதுவும்‌ சொல்ல வேண்டுவதில்லை என்றிறார்‌.

சொல்லில்‌ சகல நிட்களன மானதை சொல்லினால்‌ சொல்லாமல்‌ கோனாரே அல்லும்‌ பகலும்‌ அகத்தில்‌ இருத்திடில்‌ அந்தகன்‌ கிட்டுமோ கோனாரே?

ஒரு குருவின்‌ வழிகாட்டலைக்‌ கொண்டே இந்த தவமுறையைப்‌ பயில வேண்டும்‌ என்கிறார்‌. செவிதனில்‌ கேளாத மறை தாண்டவக்கோனே - குரு செப்பில்‌ வெளியாமலவோ தாண்டவக்கோனே. அதனால்‌ தவறான பாதையில்‌ சென்று அழிந்து விடாமல்‌ குரு மூலமாக உன்‌ உள்ளே உள்ள மெய்‌ விளக்கை உணர வேண்டும்‌ என்கிறார்‌.

கை விளக்குக்‌ கொண்டு கடலில்‌ வீழ்வார்‌ போல மெய்வினக்குன்‌ உள்ளிருக்க வீழ்குவதேன்‌ புல்லறிவே

அப்படி. குருவின்‌ மூலமாக உள்‌ ஒளிபெற்று விட்டால்‌ நீயே பிரம்மத்தைக்‌ கண்ட குருவின்‌ நிலைக்கு உயர்ந்துவிடுவாய்‌. அப்படி. உயர்ந்தபிறகு நீ மற்றவருக்கு வழிகாட்டி அவர்களைக்‌ கரையேற்ற வேண்டும்‌ என்கிறார்‌.

இருட்டறைக்கு நல்விளக்காய்‌ இருக்கும்‌ உன்றன்‌ வல்லமையை அருள்‌ துறையுள்‌ நிறுத்தி விளக்காகுக நீ புல்லறிவே,

மக்கள்‌ வழிபாடு பற்றி இடைக்காடர்


அவர்‌ வைணவ பக்தர்களுக்கு, இராமனையும்‌ கிருஷ்ணனையும்‌ நரசிம்ம மூர்த்தியையும்‌ விழா எடுத்து வழிபட்டால்‌ எல்லா நலன்களும்‌ பெருகும்‌ என்று கூறியுள்ளதை முன்னரே கண்டோம்‌. சிவனை வழிபட்டால்‌ கர்மவினைகள்‌ அகன்று நற்கதி கிடைக்கும்‌ என்றும்‌ கூறியுள்ளார்‌.

சூரியன்‌ வாள்பட்ட துய்ய பனிக்கெடும்‌ தோற்றம்போல்‌ வெவ்வினை தூள்படவே நாரி இடப்‌ பாகன்தான்‌ நெஞ்சில்‌ போற்றியே நற்கதி சேர்ந்திடும்‌ கோனாரே

அவர்‌ உருவ வழிபாட்டை மறுக்கவில்லை. கடவுளை எந்த உருவத்தில்‌ வழிபட்டாலும்‌ தெய்வ அருள்‌ கிடைக்கும்‌ என்றே கூறினார். அவர் காலத்தில் மக்கள் கோவில்கள் கட்டி பல்வேறு தெய்வங்களுக்கும் விழா எடுத்து வழிபாடுகள் செய்தனர். அவர்கள் வழிபாடுகளில் ஆடம்பரங்களும் வெளிப்பகட்டும் இருந்தனவே தவிர மனிதர்களின் உள்ளங்களில்‌ உண்மையான பக்தி இல்லை. இதனால்‌ கிரகக்கோளாறுகளும்‌ இயற்கைச்‌ சீற்றங்களும்‌ பெருகும்‌.அதனால் மக்கள்‌ துன்புறுவார்கள்‌. அவர்களுடைய விதியை அவர்கள்‌ அனுபவித்துதான்‌ தீரவேண்டும்‌ என்று கவலைப்பட்டார்‌.

அவர்‌ சமாதி பற்றிய கருத்து


அவர்‌ கார்த்திகை மாதத்தில்‌ திருக்கார்த்திகை நட்சத்திரம்‌ கூடிய பெளர்ணமி இரவில்‌, இப்போது அண்ணாமலையார்‌ பாதம்‌ உள்ள இடத்தில்‌ சமாதி கூடினார்‌ என்றும்‌ பொதுமக்கள்‌ காண அவருடைய ஆன்மா ஒளித்திரளாக விண்நோக்கி சென்றது என்றும்‌, அந்த நாளே இன்றும்‌ அண்ணாமலை தீப விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும்‌ கருதப்படுகிறது. அண்ணாமலை தீபத் திருவிழாவன்று அவர்‌ சமாதி அடைந்த திருவண்ணாமலை நகரமெங்கும்‌ நீண்டகாலமாக அன்னதானம்‌ நடைபெற்று வருகிறது. இவர் வாழ்ந்த காலத்தில்‌ தன்னை நாடிவந்தவர்களுக்கெல்லாம்‌ அன்புடன்‌ உணவளித்து விருந்து உபசாரம்‌ செய்வதை தன்‌ கடமையாகவே கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்‌. அதன்‌ பிரதிபலிப்பே இப்போதும்‌ தீபத் திருநாளன்று நடைபெற்று வரும்‌ அன்னதானங்கள்‌.

ஓம் இடைக்காடரே நமஹ ஓம் அருணாசலேஸ்வராய நமோநமஹ

இந்த மந்திரத்தை உச்சரித்து தினமும்‌ வீட்டில்‌ இருந்தபடியே வழிபாடு செய்தாலும்‌ போதும்‌ அருணாசலேஸ்வரரின்‌ திருவருளால்‌ இல்லத்தில்‌ எல்லா வளங்களும்‌ பொங்கும்‌. வாழ்க்கை இன்பமாக அமையும்‌

அமைந்துள்ள இடம்


சென்னையிலிருந்து புதுவை செல்லும்‌ கிழக்குக்‌ கடற்கரை சாலையில்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ செய்யூர்வட்டத்தில்‌ கடப்பாக்கம்‌ என்ற திருத்தலம்‌ உள்ளது. இந்த ஊர்‌ பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ சென்றால்‌ அருள்மிகு உண்ணாமுலை அம்மன்‌ உடனுறை அருணாசலேஸ்வரர்‌ ஆலயம்‌ உள்ளது. இந்த ஆலயம்‌ காசிப்பாட்டை என்ற சாலையில்‌ கடற்கரைக்கு அருகில்‌ உள்ளது. [இவ்வூர்‌ சென்னையிலிருந்து 105 கி.மீ. தெற்கே உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதியும்‌ உள்ளன. கோவில்‌ மாலை 4.00 மணி முதல்‌ 7.00 மணி வரை திறந்திருக்கும்‌ என்றாலும்‌ கோவில்‌ அர்ச்சகரின்‌ வீடு பக்கத்திலேயே இருப்பதால்‌ எந்த நேரத்தில்‌ சென்றாலும்‌ இவ்வாலயத்தில்‌ மனநிறைவோடு இறை தரிசனம்‌ செய்யலாம்‌.] இக்கோவிலுக்கு அருகில்‌ வங்கக்‌ கடலில்‌ காணப்படும்‌ இடையன்‌ திட்டு என்ற இடத்தில்‌ இப்போது இடைக்காடர்‌ அருவ நிலையில்‌ வாழ்ந்து வருகிறார்‌. இவர்‌ ஒவ்வொரு பெளர்ணமி இரவிலும்‌ இங்குள்ள அருணாசலேஸ்வரரை ஒளிவடிவில்‌ சென்று வழிபட்டு வருகிறார்‌ என்று தெரிகிறது. திருவண்ணாமலையில்‌ அருணாசலேஸ்வரர்‌ பாத பீடத்தில்‌ ஜீவ சமாதி கொண்ட இந்த சித்தர்‌ கடப்பாக்கம்‌ அருணாசலேஸ்வரர்‌ மூலம்‌ இப்பகுதியில்‌ வாழும்‌ எளிய மக்களுக்கு மறைமுகமாக உதவிகள்‌ செய்து கொண்டும்‌ அருள் வழிகாட்டிக் கொண்டும்‌ வரவேண்டும்‌ என்பதும்‌ அருணைமலையாளின்‌ திருவுளம்‌ போலும்‌. இக்கோவிலில்‌ சிவராத்திரிக்கு மறுநாள்‌ சூரிய உதய ஒளியும்‌ மாசி, பங்குனி மாதங்களில்‌ பெளர்ணமி உதய நிலவு ஒளியும்‌ மூலவர் மீது படுவது இத்திருத்தலத்தின்‌ தனிச்சிறப்பு.


16/9/18

காலங்கிநாதர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. பெயர்க் காரணம்
  3. தசாவதார சித்தர்கள்‌ தரிசனம்‌
  4. சதுரகிரியில்‌ காலங்கிநாதர்
  5. வணிகனுக்குக்‌ கோவில்கட்ட பொன்கொடுத்த வரலாறு
  6. சமாதி கூடிய இடம்
  7. பிற்சேர்க்கை

முன்னுரை - தோற்றம்


காலங்கிநாதர் 3000ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார்.
(போகர் 7000/5743)

இவர் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் மயன் சாதியில் விஸ்வகர்மாவகத் தோன்றியவர் (போ.ஏ.5698). திருமூலருக்கு முதன்மையான சீடராயிருக்கும் பெரும்பேறு பெற்றவர். மூன்று யுகங்கள் சமாதி கூடியிருந்தவர். பாரதத்திலிருந்து ககன குளிகையின் உதவியால் விண்வெளியில் சீன நாட்டிற்கு சென்றவர். சீனாவில் சமாதி கூடியிருந்து மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர். அடிக்கடி சமாதியிலிருந்து வெளிப்பட்டு சீன நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தந்ததுடன் அருளுதவிகளும் செய்து வந்தார்

பெயர்க் காரணம்


இவரது பெயர்‌க்காரணம்‌ அரியானூர்‌ கரியபெருமாள்‌ வரலாற்றில்‌ இடம் பெற்றுள்ளது. (அரியானூர்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளது. கோவில்‌ அரியானூர்‌ பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில்‌ கஞ்ச மலை அடிவாரத்தில்‌ காட்டுக்குள் உள்ளது. இந்தப்‌ பெருமாள்‌ வரலாற்றுப்படி இந்த மாகசித்தர் சீனா நாட்டில்‌ உள்ள காலங்கி என்ற ஊரிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் அதனால்‌ காலங்கிநாதர்‌ என்ற பெயரைப்‌ பெற்றார்‌. பெரும்‌பாலோர்‌ கூறும்‌ மற்றொரு காரணம்‌. இவர்‌ உடல் எலும்பு, தசை, இரத்தம்‌, நரம்பு போன்ற அங்கங்களால்‌ ஆனதல்ல. காற்றையே உடம்பாகக்‌ கொண்டவர்‌ [கால்‌-காற்று; அங்கி - உடல்‌ ] அதனால்‌ காலங்கிநாதர்‌ என்ற காரணப் பெயரைப்‌ பெற்றுள்ளார்‌.

தசாவதார சித்தர்கள்‌ தரிசனம்‌


இந்த உண்மை போகர் சப்‌தகாண்டம்‌ 7000ல்‌ இடம்‌ பெற்றுள்ளது. திரேதாயுகத்தில்‌ ஒரு சமயம்‌ ஒரு மிகப்‌ பெரிய நீர்ப்பிரளயம்‌ ஏற்பட்டது. மழை வெள்ளத்தில்‌ உலகமே அழிந்துவிடும் போல்‌ இருந்தது. மழை வெள்ளத்தில்‌ பூமியே கொஞ்சம்‌ கொஞ்சமாக மூழ்கிக்‌ கொண்டிருந்த போது காலங்கிநாதர்‌ ஒரு மலையின்‌ உச்சியை நோக்கி மேலும்‌ ஏறிப் போய்க் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழுமியிருந்த ரிஷிகள் பலர் இதற்கும் மேலே செல்ல எங்களுக்கு சக்தி, இல்லை. வினாடிக்கு வினாடி நீர்மட்டம்‌ உயர்ந்து கொண்டே இருக்கிறது. உன்னால்‌ முடிந்தால்‌ நீ மேலே போய்விடு என்று கூறினார்கள்‌. மேலே ஏறிச்சென்ற காலங்கிநாதர்‌ எதிரே மிகப்‌ பெரிய புலி ஒன்று படுத்துக்கிடக்கக்‌ கண்டார்‌. பார்த்த மாத்திரத்தில்‌ அது! ஒரு புலியல்ல; புலி உருவில்‌ படுத்திருப்பவர்‌ ஒரு மகா சித்தரே என்பதை உணர்ந்து கொண்டார்‌
(செய்தி போகர்‌ 7000/6867 ஆம்‌ பாடலில்‌ இடம்பெற்றுள்ளது)

மேலும்‌ உயரே செல்லச்‌ செல்ல காலங்கி நாதர்‌ ஒருவர்‌ பின்‌ ஒருவராக மச்சரிஷியையும்‌, கூர்ம ரிஷியையும்‌, வராக ரிஷியையும்‌, நரசிம்ம ரிஷியையும்‌ கண்டார்‌. மேலும்‌ உயரே செல்லச்‌ செல்ல வாமனரிஷி, பரசுராமரிஷி, ராமரிஷி, பலராமரிஷி, பெளத்த ரிஷி. கல்கிரிஷி ஆகிய பத்து ரிஷிகளையும்‌ சந்தித்து ஆசிபெற்றார்‌. இவர்களையே கலியுக மனிதர்கள்‌ திருமாலின்‌ தசாவதாரங்கள்‌ என்று கூறியுள்ளனர்‌.

சதுரகிரியில்‌ காலங்கிநாதர்‌:


(ஞானவிந்த ரகசியம்‌' என்ற 30 பாடல்கள்‌ கொண்ட நூலில்‌ தன்‌ தவ வாழ்க்கை பற்றி காலங்கி. நாதரே கூறியது)

காலங்கிநாதர்‌ சதுரகிரி மலைப்‌ பகுதியில்‌ நீண்ட காலம்‌ தவ வாழ்க்கை வாழ்ந்தார்‌. அக்காலத்தில்‌ அம்மலைக்‌ குகைகளில்‌ நீண்டகால தவத்தில்‌ ஈடுபட்டிருந்த உயர்நிலை சித்தர்களையும்‌. மகரிஷிகளையும்‌ பற்றிக்‌ கூறியுள்ளார்‌. 9ஆம்‌ பாடலில்‌, அம்மலைக்கு சதுரகிரி என்ற பெயர்‌ வந்த காரணம்‌ வேதங்கள்‌ நான்கும்‌ ஒன்றாய்‌ சார்ந்திங்கு ஓருருவாய்‌ சமைந்ததாலே என்கிறார்‌. இதே பாடலில்‌ இங்குள்ள மகாலிங்கரின்‌ அடியைப்‌ போற்றி விண்ணவரும்‌, மண்ணவரும்‌ உயர்‌ முனிவர்‌ சித்தர்‌ எனப்‌ பெயர்‌'பெற்றாரே' என்கிறார்‌. 11-ஆம்‌ பாடலில்‌, அப்பகுதியில்‌ "நவசித்தர்‌ குகை ஒன்றுண்டு; நின்றந்தச்‌ சித்தர்களை மனத்துள்‌ எண்ணிநிதானமாய் அவ்வழியில்‌ போக வேண்டும் என்கிறார். அடுத்த மூன்று பாடல்களில் பாம்பாட்டி சித்தர் அத்திரி முனிவர், நாதாந்த சித்தர், வேதாந்த சித்தர், குதம்பை சித்தர், ஞான சித்தர், மிருகண்டேயர் வராரிஷி, தவ சித்தர், யோக சித்தர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரமர், அகப்பை சித்தர், நாதரிஷி, வியாச முனிவர், ஆகிய சித்தர்களும் மகரிஷிகளும் வாழ்ந்து வரும் குகைகளைப் பற்றிக் கூறியுள்ளார்.

வணிகனுக்குக்‌ கோவில்கட்ட பொன்கொடுத்த வரலாறு


காலங்கி நாதர்‌ சதுரகிரியில்‌ தவம்‌ இயற்றிக்‌ கொண்டிருந்த காலத்தில்‌ ஒரு நாள்‌ வணிகன்‌ ஒருவன்‌ அவரிடம்‌ ஓடிவந்து அவர்‌ காலில்‌ விழுந்து ஐயனே! ஒரு சிவாலயம்‌ கட்ட வேண்டும் ‌ என்ற ஆசையில்‌ ஆலயத்திருப்பணி வேலையையும்‌ தொடங்கிவிட்டேன்‌. தொடக்க காலத்திலேயே கட்டடம்‌ எழுப்பும்‌ பணியில்‌ கையில்‌ இருந்த செல்வம்‌ எல்லாம்‌ கரைந்துவிட்டது. வீடு நிலம்‌ எல்லாவற்றையும்‌ விற்று செலவு செய்துவிட்டேன்‌. ஆலயத்திருப்பணியில்‌ முழுமையாக ஈடுபட்டதில்‌ தொழிலையும்‌ விட்டுவிட்டேன்‌. இப்போது உணவுக்கும்‌ வழியின்றித் ‌திண்டாடுகிறேன்‌. செல்வந்தர்களும்‌, மன்னரும்கூட எனக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர்‌. இப்போது எனக்கு உங்களை விட்டால்‌ வேறு கதி இல்லை என்று வேண்டிக்‌ கதறினான்‌. காலங்கிநாதரோ அவனுக்கு பதில்‌ ஏதும்‌ கூறவில்லை. இருப்பினும்‌ வணிகன்‌ மனம்‌ தளரவும்‌ இல்லை. முனிவரை விட்டுச்‌ செல்லவும்‌ இல்லை. இரவு பகலாக அவருக்குத்‌ தொண்டு செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டான்‌. ஓர்‌ இரவு ஆழ்ந்த தூக்கத்தில்‌ அவன்‌ எப்போது நான்‌ கோவில்‌ கட்டுவேன்‌? எப்போது என்‌ ஐயனைப்‌ பிரதிஷ்டை செய்வேன்‌? என்று பிதற்றிக்‌ கொண்டிருந்தான்‌. அதைக்‌ கண்ணுற்ற முனிவ‌ர் அவன்‌ கோவில்‌ கட்டவே விரும்புகிறான் என்பதைப் புரிந்து கொண்டு அவன் மேல் இரக்கப்பட்டு அவனுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்‌. மலை மேலிருந்த பல அரிய மூலிகைகளைக்‌ கொண்டு வகாரத்‌ தைலம் என்ற தைலத்தைத்‌ தயாரித்து அதிலிருந்து சுத்த தங்கத்தைத்‌ தயாரித்துக்‌ கொடுத்தார்‌. வணிகனும்‌ அத்தங்கத்தை விற்று திருக்கோவிலைக்‌ கட்டி முடித்தான்‌.

மேலும்‌ வகாரத்‌ தைலம்‌ பொங்கிக்‌ கொண்டிருந்ததைக்‌ கண்ட சித்தர்‌ செம்பொன்‌ உண்டாக்கக்கூடிய அத்தைலத்தைத்‌ தீயோர்‌ எவரும்‌ எடுத்துப்‌ பயன்படுத்தக்‌ கூடாது என்பதற்காக அதை ஒரு கிணற்றில்‌ தேங்க வைத்தார்‌. அக்கிணற்றின்மேல்‌ ஒரு பாறையைப்‌ போட்டு மூடிவிட்டு அதன்‌ நான்கு புறத்திலும்‌ வராகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன்‌ ஆகியோரைக்‌ காவலுக்கு வைத்துவிட்டு மீண்டும்‌ தவமியற்ற வேறோரிடத்திற்குச்‌ சென்று விட்டார்‌. இந்த வரலாறு சதுரகிரி தல புராணத்தில்‌ உள்ளது.

சமாதி கூடிய இடம்


காலங்கிநாதர்‌ சீனநாடு இந்தியாவின்‌ வட, மத்திய பகுதிகளையெல்லாம்‌ சுற்றிக்கொண்டு கடைசியாக தமிழகம்‌ வந்து சேலம்மாவட்டத்தில்‌ உள்ள கஞ்சமலையில்‌ தவ வாழ்க்கை வாழ்ந்துவந்தார்‌. அப்போது மலையடிவாரத்தில்‌ சுயம்புவாக இரண்டு லிங்கங்கள்‌ தோன்றக்‌ கண்டார்‌. ஞானதிருஷ்டியால்‌ அந்த லிங்கங்கள்‌ இரண்டும்‌ லவன்‌, குசன்‌ என்று கண்டுணர்ந்தார்‌. அந்த லிங்கங்களுக்கு அவை தோன்றிய இடத்திலேயே கோவில்கட்டி வழிபட்டும்‌ வந்தார்‌. கடைசியில்‌ அங்கேயே ஜீவ சமாதியும்‌ அடைந்தார்‌. இவை யாவும்‌ திரேதா யுகத்தில்‌ நடந்து முடிந்தவை.இவையெல்லாம்‌ நடந்து முடிந்து பல ஆயிரம்‌ ஆண்டுகள்‌ ஆகிவிட்டன. கலியுகம்‌ தோன்றியே ஐயாயிரம்‌ ஆண்டுகளும்‌ கடந்துவிட்டன. லவகுசர்‌ கோவிலும்‌ சித்தர்‌ சமாதியும்‌ சிதைந்துபோய்‌ காலத்தால்‌ மண்‌ மூடி புதைந்துவிட்டன.ஒரு மூலவர்‌ பெருமாள்‌ சன்னதியும்‌ துவஜஸ்தம்பமுமே அங்கே கோவில்‌ இருந்ததற்கு அடையாளமாக எஞ்சி நின்றன.

சமீப காலத்தில்‌ கஞ்சமலைப்‌ பகுதியில்‌ வாழ்ந்து வரும்‌ சந்திரப்பிரகாசம்‌ என்பவருக்கு, சமாதிகூடிய காலங்கி நாதரின்‌ திருவருள்‌ கிடைக்கப்பெற்றது. தெய்வ நிலையில்‌ வாழ்ந்து வரும்‌ அந்த சித்தரின்‌ அருளால்‌ சந்திரப்பிரகாசம்‌ என்பவர்‌ உள்ளுணர்வில்‌ “நீண்ட காலத்திற்கு முன்‌ அங்கு லவகுசர்களின்‌ கோவில்‌ இருந்தது. அவர்களுக்குப்‌ பக்கத்திலேயே காலங்கி நாதரின்‌ ஜீவசமாதியும்‌ இருந்தது. சீதா தேவியார்‌ தன்‌ இரு பிள்ளைகளுடன்‌ அக்கினிப்‌ பிரவேசம்‌ செய்தபோது லவன்‌, குசன்‌ ஆகிய இருவரில்‌ குசன்‌ மட்டும்‌ தீயில்‌ கருவ கரிய மேனியுடன்‌, வெளிப்பட்டு இங்கு கரியபெருமாள்‌ என்ற திருப்பெயருடன்‌ கோவில்‌ கொண்டுள்ளார்‌. அருகிலேயே காலங்கிநாதரும்‌ கரடி சித்தர்‌ என்ற பெயருடன்‌ ஜீவ சமாதி பூண்டுள்ளார்‌ என்ற உண்மைகள்‌ தோன்றின.

அதைத்‌ தொடாந்து காலங்கிநாதரின்‌ கட்டளையைத்‌ தலைமேல்‌ கொண்டு அருவநிலையிலுள்ள அந்த மகாசித்தரின்‌ அனுக்ரகத்துடன்‌ சந்திரப்‌ பிரகாசர்‌ கரிய பெருமாள்‌ கோவிலை கஞ்சமலைக்கு அருகில்‌ உள்ள அரியானூரில்‌ சித்தர்‌ சமாதி கூடிய இடத்திலேயே எழுப்பினார்‌. மூலவருக்கு இடப்பாகத்திலேயே காலங்கிநாதரின்‌ சிலையையும்‌ பிரதிஷ்டை செய்தார்‌. கடந்த 2003. ஆம்‌ ஆண்டில்தான்‌ இக்கோவிலின்‌ குட முழுக்கும்‌ நிறைவேறியது இன்றும்‌ காலங்கிநாதர்‌ கரடிசித்தர்‌ என்ற திருநாமத்துடன்‌ அக்கோவிலில்‌ குடிகொண்டிருந்து மக்களுக்கு உதவி செய்து வருவதுடன்‌ வழிகாட்டியாகவும்‌ இருந்து வருகிறார்‌. அவருக்குக்‌ கரடி சித்தர்‌ என்ற பெயர்‌ வந்த வரலாறு பிற்சேர்க்கையாக உள்ளது.
காலங்கி நாதர்‌ கஞ்சமலையில்தான்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்பதைக்‌ கீழ்‌ வரும்‌ நிகழ்ச்சி உறுதிபடுத்துகிறது.
இதன்படி:

காலங்கிநாதர்‌ அவருடைய குருநாதர்‌ திருமூலருடன்‌ கஞ்சமலைப்பகுதிக்கு வந்தார்‌. சீடரை உணவு சமைக்கச்‌ சொல்லிவிட்டு குருநாதர்‌ மலைச்சாரல்களில்‌ மூலிகைகளைத்‌ தேடிச்‌ சென்று விட்டார்‌. அரிசி வெந்து கொண்டிருந்த போது காலங்கி, அருகில்‌ இருந்த ஒரு செடியின்‌ குச்சியை ஒடித்து அதைக் கொண்டு சோற்றைக் கிளறினார்‌. அதன்‌ விளைவாக சோறு கருப்பாகிவிட்டது. குரு வந்தால்‌ கோபிப்பாரே என்ற பயத்தில்‌ அவர்‌ கருகியிருந்த சோறு முழுவதையும்‌ தானே சாப்பிட்டுவிட்டார்‌. சாப்பிட்ட மாத்திரத்தில்‌ அவர்‌ ஒரு இளம்‌ வாலிபனாக மாறிவிட்டார்‌.அவர்கிளறிய குச்சி ஒரு அரிய மூலிகை என்பது அப்போதுதான்‌ அவருக்குத்‌ தெரிந்தது.திரும்பி வந்த திருமூலர் தன் சீடனின் உடலில் ஏற்பட்ட மற்றத்தினைக் கண்டுவியந்து தனக்கும் அந்த இளமை வரவேண்டும் என்றார்.காலங்கிநாதர் தன் விரல்களைத் தொண்டைக்குள் வீட்டுக் குமட்டி சாப்பிட்ட சோற்றையெல்லாம் வாந்தி எடுத்தார் அதை சாப்பிட்ட மாத்திரத்தில்‌ குருநாதர்‌ திருமூலரும்‌ இளைஞராகி விட்டார் இதனால்‌ பெருமகிழ்ச்சி அடைந்த குருநாதர்‌ தன்‌ சீடருக்கு தவத்திட்சை அளித்து காலங்கிநாதரை சுத்தசித்தர்‌ நிலைக்கு உயர்த்திவிட்டார்

நிறைநிலை சித்தரான காலங்கி நாதர்‌ மீண்டும்‌ ஆயிரம்‌ ஆண்டுகள் கஞ்சமலையின்‌ தெற்கேயுள்ள உத்தம சோழபுரத்தில்‌ எழுந்தருளியிக்கிற கரபுரீஸ்வரர் நினைத்து தவமிருந்தார். பிறகு ஒரு நாள் ஆதிசிவன் அவர் ‌முன்‌ தோன்றி அவருக்கு சித்தேஸ்வரர்‌ என்ற திருநாமம்‌ சூட்டி கஞ்ச மலைப்பகுதியிலேயே இருந்து அருளாட்சி அருளாட்சி செய்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார்‌.
இறைவன் கட்டளைக்கிணங்க காலங்கிநாதர் கஞ்ச மலையிலயே வீராசனத்தில்‌ இரண்டு யுக காலமாக சித்தேஸ்வரராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌.

இன்றும்‌ பெளர்ணமிதோறும்‌ சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் ‌18 கி.மீ. சுற்றளவு கொண்டுள்ள கஞ்ச மலையைச்‌ சுற்றி கிரிவலம்‌ வந்து கஞ்சமலை சித்தேஸ்வரராக அருள்புரியும்‌ காலாங்கிநாதரை வழிபட்டு நலம்பெற்று வருகின்ற பக்தர்கள்‌ ஏராளம்.

இந்த மலைக்கோவிலுக்கு சேலம்‌ பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக பேருந்துகள்‌ செல்கின்றன. இக்கோவிலில்‌ சித்தேஸ்வரராக இருந்து இறைமாட்சி செய்துவரும்‌ காலங்கி நாதர்‌ கஞ்சமலை சித்தர் ‌ என்றும்‌ வழங்கப்படுகிறார்‌.
ஆனால்‌ போகர்‌ 7000 என்ற நூலில்‌ 5742 ஆம்‌ பாடலில்‌:

சித்தான காலங்கி முனிவர்தானும்‌ சிறப்புடனே சீனபுதிதன்னிலசென்று முனையானை சமாதி தனிலிறங்கியல்லோ பக்தியுள சீனபதி மாந்தருக்கு பலகாலும்‌ தரிசனங்கள்‌ புரிகுவாரே
என்றுள்ளவாறு காலங்கிநாதர்‌ சீன தேசத்தில்‌ சமாதி பூண்டுள்ளார்‌.

ஒரு சமயம்‌ போக முனிவர்‌ சீன நாட்டில்‌ காலங்கிநாதர்‌ சமாதி அடைந்திருந்த முக்காதக்‌ கோட்டைக்குள்‌ நுழைந்து அவரை வணங்கி நின்றார்‌. அப்போது சமாதி கூடத்தின்‌ கதவு தானாகவே திறந்து கொண்டது. காலங்கிநாதர்‌ ஒளிமயமாகப்‌ போகருக்குத்‌ தரிசனம்‌ தந்தார்‌. இந்த இருவேறு ஆதாரங்களின்படி காலங்கிநாதர்‌ சீனாவில்‌ சமாதியடைந்துள்ளார்‌ என்று எண்ண வேண்டியுள்ளது.

போகரின்‌ 'ஜனன சாகரம்‌' என்ற நூலின்‌ 306 ஆம்‌ பாடலில்‌வரும்‌,
ஆதியென்ற சிதம்பரமே திருமூலராச்சு அவருடன்‌ பதினெண்‌ பேரதிலேயாச்சு சோதியென்ற காலங்கி நாதர்தாமும்‌ துலங்குகின்ற காஞ்சிபுரந்தனிலேயாகும்‌

என்ற அடிகளின்படி காலங்கிநாதர்‌ காஞ்சிபுரத்தில்‌ ஜோதி வடிவிலே சிவத்துடன்‌ கலந்தார்‌ என்று கொள்ள வேண்டியுள்ளது: காலங்கிநாதர்‌ திருக்கடவூரில்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்றும்‌ சில சித்த ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. அவர் எங்கே சமாதி கொண்டுள்ளார்‌ என்பது சரியாகத்‌ தெரியவில்லை என்றாலும் அவரை உண்மையாக வழிப்பட்டு வரும் பக்தர்கள் அனைவர்களின் இதயங்களில் குடிகொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது மட்டும் உலகம் உள்ளளவும் மறுக்க முடியாத உண்மை.

பிற்சேர்க்கை


காலங்கிநாதருக்கு கரடிசித்தர் என்ற பெயர் வந்த வரலாறு

அக்காலத்தில்‌ உத்தம சோழபுரத்தில்‌ வாழ்ந்து வந்த காடன்‌ என்பவனுக்கு நான்கு பெண்கள்‌ இருந்தனர்‌. அவனுடைய தங்கை மகன் ஒருவன்‌ அவனிடம்‌ வேலை செய்து வாழ்ந்துவந்தான்‌. தன்‌ பெண்கள் பெரியவர்கள்‌ ஆனதும்‌ தன்‌ முதல்‌ மகளைத்தன்‌ மருமகனுக்குத்‌ திருமணம்‌ செய்து கொடுப்பதாக வாக்களித்‌தார். ஆனால் வாக்கு தவறி அவனை வேறு ஒரு உறவினனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவ்வாறே வாக்கு தவறி இரண்டாவது மகளையும்,மூன்றாவது மகளையும்கூட வேறு இருவருக்கு மணம் முடித்து விட்டார்

காடனின் மருமகன்,தன்மாமன் அவனது நான்காவது மகளையும் தனக்கு மணம் செய்து கொடுக்கமாட்டான் என்பதை தெரிந்திருந்தாலும்‌ தன்‌ மாமன்‌ வாழ உண்மையாக உழைத்து வந்தான்‌. ஒருநாள்‌ மாமனும்‌ மருமகனும்‌ மலைக்காட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது காடன்‌ தன்‌ மருமகனிடம்‌, என்‌ நான்காவதுதமகள்‌ உனக்குத்தான்‌ என்றான்‌. அதைச்‌ சிறிதும்‌ நம்பாத மருமகன்“தான்‌ இனியும்‌ ஏமாறத்‌ தயாராக இல்லை. உன்‌ கடைசி மகளையும் நீ விரும்பும்‌ வேறு யாருக்காவது கொடுத்துவிடு. நான்‌ என் வழியைப்‌ பார்த்துக்‌ கொள்கிறேன்‌” என்றான்‌. அப்போது மலையில்‌ சித்தேஸ்வரராகக்‌ கோயில்‌ கெண்டிருந்து அருளாட்சி செய்து வரும்‌ காலங்கிநாதர்‌ ஒரு கரடி உருக்கொண்டு கரபூரீஸ்வரரை வழிபடுவதற்காக அவ்வழியே வந்தார்‌.அக்கரடியைக்‌ கண்ட காடன்‌, அவ்விலங்கு ஒரு மகா சித்த புருஷர்‌ என்பதை அறியாதவனாய்‌, அக்கரடியைக்‌ காண்பித்து, இக்கரடி சாட்சியாக என்‌ மகளை உனக்கே திருமணம்‌ செய்து கொடுக்கிறேன். இது சத்தியம், என்று மருமகனுக்கு வாக்கு கொடுத்தான்.

கொஞ்சம்‌ நாள்‌ கழித்து காடன்‌ தன்‌ மகளுக்கு வெளியில்‌ மாப்பிள்ளை தேடத்‌ தொடங்கினான்‌. அப்போது ஒரு நாள்‌ அவன்‌ மருமகன்‌ தங்கள்‌ உறவினர்கள்‌ யாவரையும்‌ கூட்டமாக அழைத்து வந்து வைத்துக்கொண்டு அவர்கள்‌ முன்னிலையில்‌ காடன்‌ மூன்று முறை சத்தியம்‌ தவறியதையும்‌, நான்காவதாகத்‌ தனக்குக்‌ கரடியை சாட்சியாக வைத்து சத்தியம்‌ செய்ததையும்‌. இப்போதும்‌ சத்தியம்‌ தவறிப்‌ பேசுவதையும்‌ விபரமாக எடுத்துரைத்தான்‌ . காடன்‌, தன்‌ மருமகன் தான்‌ பொய்‌ கூறுகிறான்‌ என்றான்‌. அதனால்‌ மனம்‌ உடைந்த மருமகன்‌ கடவுளை நினைத்து “நான்‌ சொல்வது உண்மையென்றால்‌ அந்தக்‌ கரடியே வந்து சாட்சி சொல்லி உண்மையை வெளிப்படுத்தட்டும்‌' என்று மனமுருகி வேண்டினான்‌. அடுத்த நொடியே காலங்கிநாதர்‌ அனைவரும்‌ காண கரடி உருவில்‌ அங்கே தோன்றி, மூன்று முறை தலை அசைத்து மருமகன்‌ சொன்னது உண்மையென்று நிரூபித்து அவனுக்கே காடன்‌ தன்மகளை மணம்‌ முடித்துக்‌ கொடுக்க வைத்தார்‌. அதுமுதல்‌ அவர்‌. கரடி சித்தர்‌ என்ற பெயராலும்‌ வழிபடப்பட்டு வருகிறார்‌. இந்த நிகழ்ச்சி கஞ்சமலை “அருள்மிகு சித்தேஸ்வர்‌ சுவாமி திருக்கோயில்‌ தல வரலாறு' என்ற நூலில்‌ இடம்பெற்றுள்ளது.