Top bar Ad

2/10/18

தேரையர்‌

77
பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. இளமை வாழ்க்கை
  3. திரணாக்கியரின்‌ தலைநோயை நீக்கியது
  4. கூன்‌ பாண்டியனின்‌ கூனை நிமிர்த்திய கதை
  5. தேரையர்‌ செத்துப்‌ பிழைத்த கதை
  6. குருவுக்கு பார்வை கொடுத்த வரலாறு
  7. தேரையரின்‌ மருத்துவ குறிப்புகள்
  8. ஜீவ சமாதி

முன்னுரை


தேரையர்‌ என்ற இவரது பெயர்‌, வெறும்‌ காரணப்‌ பெயர்‌ தான்‌. இவரது உண்மையான பெயர்‌ ராமதேவன்‌. இந்த விவரம்‌, அபிதான சிந்தாமணி என்ற நூலில்‌ காணப்படுகிறது. இவர்‌ அகத்தியரின்‌ தலைமை மாணவர்‌, தேரையர்‌ தம்‌ பெயரைத்‌ தேரன்‌ என்றே பல இடங்களிலும்‌ குறிப்பிட்டுள்ளார்‌. போகரும்‌ கருவூராரும்‌ அவர்‌ பிராமண குலத்தவர்‌ என்று கூறியுள்ளனர்‌

பாடல்‌: போகர்‌ ஏழாயிரம்‌ 3942; கருவூரார்‌ வாதகாவியம்‌621.

இளமை வாழ்க்கை


அவர்‌ பாலாற்றின்‌ வடக்கரையில்‌ உள்ள திருமலைச்சேரியில்‌ பிறந்தவர்‌. தந்தை பெயர்‌ நம்பூபதி. இவர்‌ கூரத்தில்‌ வாழ்ந்த தரும செளமியர்‌ என்ற புத்த மதத்துறவியிடம்‌ மருத்துவம்‌ பயின்றார்‌. அத்‌துறவியின்‌ வழிகாட்டுதலின்படி அகத்தியரின்‌ சீடரானார்‌ என்று பல மருத்துவ ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன.

அகத்தியர்‌ தகுந்த சீடன்‌ ஒருவனைப்‌ பெற வேண்டி பொதிகை மலையிலிருந்து இறங்கி ஊருக்குள்‌ வந்தார்‌. வழியில்‌ ஒளவையாரை சந்தித்தார்‌. முனிவரிடம்‌ ஒளைவையார்‌ ஒரு சிறுவனைக்‌ காண்பித்து இவன்‌ முற்பிறப்பில்‌ இராமதேவர்‌ என்ற சித்தராக இருந்தவன்‌. இப்போது இவன்‌ ஒரு வாய் பேசாத ஊமையாக என்னிடம்‌ வந்துள்ளான்‌. இவன்‌ உங்களுக்கு ஏற்ற சீடனாக இருப்பான்‌ என்று கூறினார்‌. தேரன்‌ அகத்தியரின்‌ சீடனானான்‌. ராமதேவரின்‌ வாழ்க்கையில்‌ நடந்த ஒரு சம்பவம்‌ தான்‌, இவரை தேரையர்‌ ஆக மாற்றியது. அது என்னவெனில்‌

திரணாக்கியரின்‌ தலைநோயை நீக்கியது


காசிவர்மன்‌

காசியை ஆண்ட, அரசன்‌ காசிவர்மன்‌ ஒரு முறை வேட்டைக்குச்‌ சென்றான்‌. வேட்டை ஆடிய களைப்பில்‌ ஒரு குளத்தின்‌ அருகே அயர்ந்து தூங்கி விட்டான்‌, அப்போது ஒரு தேரைக்‌ குஞ்சு, காத்து வழியாக அவனது மூளைக்குள்‌ சென்று மெல்ல, மெல்ல வளர்ந்து வந்தது. அதன்‌ காரணமாக அரசன்‌, மிகுந்த தலை வலியால்‌ அவதிப்பட்டான்‌. தேரை வளர, வளர அவனது தலை வலியும்‌ நாளுக்கு நாள்‌ வளர்ந்தது.

அகத்தியர் வருகை

என்ன செய்வது? ஏது செய்வது? என்று அரண்மனை வைத்தியர்கள்‌, செய்வதறியாது தங்கள்‌ கைகளைப்‌ பிசைந்தனர்‌. அவர்கள்‌, யாராலும்‌ என்ன நடந்தது என்பதை உணர இயலவில்லை. அப்பொழுது தான்‌, எல்லோருக்கும்‌ அகத்தியரின்‌ ஞாபகம்‌ வந்தது. உடனே, அவரை அரண்மனைக்குள்‌ சகல மரியாதைகளுடன்‌ அழைத்தனர்‌. அந்த, காசி அரசனும்‌ அகத்தியரிடம்‌, தனது தலைவலியைத்‌ தீர்க்க மன்றாடினான்‌. அகத்தியர்‌, தனது ஞானத்தால்‌ நடந்ததை உணர்ந்தார்‌.

கபால வெட்டு சிகிச்சை

உடனே, அதற்கான தீர்வையும்‌ கண்டு அறிந்தார்‌. அரசனுக்கு, கபால வெட்டு சிகிச்சை அளிக்க முற்பட்டார்‌. [ அதாவது கபாலத்தை, சில சிறப்பு வாய்ந்த மூலிகை மூலமாகத்‌ திறந்து, தேரையை எடுப்பது தான்‌ கபால வெட்டு சிகிச்சை [இன்றைய காலத்தில்‌ open heart surgery என்று கேள்விப்பட்டு இருப்போம்‌. அந்த வகையில்‌ இது அக்காலத்தில்‌ செய்யப்பட்ட open brain surgery ]. அவ்வாறே, அரசனுக்கு மொட்டை அடித்து, மண்டை ஓட்டை மூலிகை மூலமாக இலகுவாக்கி, அதனைத்‌ (மண்டை ஓட்டை) திறந்து பார்த்தால்‌, மூளையின்‌, பிசு பிசுப்பில்‌ ஒட்டி இருந்தது தேரை. ஆனால்‌, இப்பொழுது அகத்தியர்‌ மனதில்‌ ஒரு கேள்வி, அது கேள்வி என்பதை விட குழப்பம்‌ என்று தான்‌ சொல்ல வேண்டும்‌, அதாவது எப்படி, இந்தத்‌ தேரையை, அரசனின்‌ மூலையில்‌ உள்ள நரம்பு மண்டலம்‌ பாதிக்காமல்‌ எடுப்பது என்பது தான்‌.

தேரையர்

ஆனால்‌, ராமதேவனுக்கு தேரையை எடுக்கும்‌ அந்த சூட்சுமம்‌ புரிந்தது. ஒரு அகண்ட பாத்திரத்தில்‌ நீர்‌ கொண்டு வந்து தேரையின்‌ கண்ணில்‌ படும்‌ படியாக அதன்‌ அருகில்‌ கொண்டு சென்று, ஒரு சிறு குச்சியால்‌ அந்த நீரில்‌ சல சலப்பை ஏற்படுத்தினார்‌. நீரின்‌ சத்தம்‌ கேட்ட தேரை. அந்த நீரை நோக்கிப்‌ பாய்ந்து, குதித்தது. பின்‌ சந்தான கரணி என்னும்‌ மூலிகையைக்‌ கொண்டு அரசனின்‌ கபாலத்தை அகத்தியர்‌ உட்பட அவரது சீடர்கள்‌ அனைவரும்‌ பக்குவமாய்‌ மூடினார்கள்‌. அன்று முதல்‌ அந்த அரசனின்‌ தலைவலி முற்றிலும்‌ நீங்கியது. அவன்‌ அகத்தியருக்கு நன்றி தெரிவித்தான்‌. தனது சீடன்‌ ராமதேவனின்‌, அறிவு பூர்வமான செயலைப்‌ பார்த்த அகத்தியர்‌ அன்று முதல்‌ அவரைத்‌ தேரையர்‌ என்றே அழைத்தார்‌. தேரன்‌ இப்படி எளிமையாகத்‌ தேரையைத்‌ தலையிலிருந்து எடுத்ததைக்‌ கண்டு மகிழ்ந்த குருநாதர்‌ தன்‌ சீடனுக்குத்‌ தேரையன்‌ என்று பெயர்‌ சூட்டியதுடன்‌ அவனது ஊளமைத்‌ தன்மையைப்‌ போக்கி அவனை நன்றாகப்‌ பேசவும்‌ வைத்தார்‌. இந்த வரலாறும்‌ அகத்தியர்‌ 12000 என்ற நூலில்‌ உள்ளது.

தொல்காப்பியன்‌

சங்கப்‌ புலவரான இந்தத்‌ திரணாக்கியர் தான்‌ அகத்தியத்தின்‌ வழி நூலான தொல்காப்பியத்தை இயற்றிய குருவான அகத்தியரால்‌ தொல்காப்பியன்‌ என்று சிறப்பிக்கப் பெற்றார்‌. இத்தொல்காப்பியர் தான்‌ அகத்தியரால்‌ தலைநோய்‌ நீங்கப்பெற்றவர்‌ என்பது அகத்தியரே தம்‌ நூலில்‌ கூறியிருக்கும்‌ உண்மை.

நக்கீரருக்குப்‌ பத்தாண்டு காலம்‌ தீராத தலைவலி இருந்ததென்றும்‌ நச்சினார்க்கினியரின்‌ அழைப்பிற்கிணங்க அகத்தியரும்‌ தேரையரும்‌ வந்து அவரது நீண்டகாலத்‌ தலைவலியை நீக்கினார்கள்‌ என்றும்‌ சில மருத்துவ ஆய்வு நூல்களில்‌ கூறப்பட்டுள்ளன.

கூன்‌ பாண்டியனின்‌ கூனை நிமிர்த்திய கதை


ஒரு பாண்டிய மன்னனின்‌ முதுகு கூனலாய்‌ இருந்தது. அவன்‌ கூனலை நிமிர்க்க தேரனை அழைத்துக்கொண்டு அகத்தியர்‌ சென்றார்‌. மன்னருக்குத்‌ தேய்க்க ஒரு பெரிய கொப்பறையில்‌ தைலம்‌ காய்ச்சப்பட்டது. அவசரமாக மன்னன்‌ அழைக்க அகத்தியர்‌ சீடனிடம்‌ 'கவனமாய்‌ பார்த்துக்கொள்‌! என்று கூறிவிட்டு மன்னனிடம்‌ சென்றார்‌. அப்போது எண்ணெய்க்‌ கொப்பறைக்கு மேலே இருந்த தளத்தில்‌ மூங்கிலால்‌ வில்‌ போல்‌ வளைத்து செய்யப்பட்டிருந்த பல்லக்குக்‌ கொம்பு ஒன்று போடப்‌பட்டிருந்தது. தைலம்‌ கொதித்துக் கொண்டிருந்த போது பல வளைவுகளோடிருந்த பல்லக்குக் கொம்பு கொஞ்சம்‌ கொஞ்சமாக நிமிர்ந்து நேராகி வந்தது. அதைக்கண்ட தேரன்‌ தைலம்‌ பதத்திற்கு வந்து விட்டதை யூகித்தறிந்து அடுப்பை அணைத்து விட்டான்‌. திரும்பி வந்த அகத்தியர்‌ திடுக்கிட்டு “ஏன்‌ நெருப்பை அணைத்தாய்‌ என்று கேட்க சீடன்‌ மேல்‌ தளத்தில்‌ நிமிர்ந்து கிடந்த பல்லக்குக்கொம்பை குருவிடம்‌ காட்டினான்‌. அதைக்கண்ட அகத்தியர்‌ என்‌ சீடனான ஊமைப்‌ பிள்ளைக்கு பேச்சுதான்‌ வரவில்யை தவிர மற்ற எல்லா வகையிலும்‌ அவன்‌ கெட்டிக்‌காரனாய்‌ இருப்பதைக்‌ கண்டு நான்‌ பெருமைப்படுகிறேன்‌' என்று கூறினார்‌. அதுமுதல்‌ அவர்‌ வைத்தியம்‌ பார்க்க எங்கு சென்றாலும்‌ அவனையும்‌ அழைத்துச் செல்வது வழக்கமாகி விட்டது.

தேரையர்‌ செத்துப்‌ பிழைத்த கதை


தேரையர்‌ நிறைநிலை சித்தராகவும்‌ மருத்துவராகவும்‌ வளர்ந்து விட்டதால்‌ அவரது குருநாதரே அவரைத்‌ தனித்திருந்து செயல்படும் படி கூறி ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்‌. தேரையரும்‌ அகத்தியரை விட்டகன்று நாகலா மலைப்பகுதியில்‌ தவக்குடில்‌ அமைத்துக் கொண்டு மக்களுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டும்‌, சீடர்களை சித்த நெறியில்‌ வளர்ச்சி பெற வழி காட்டிக் கொண்டும்‌ வாழ்ந்து வந்தார்‌. அப்போது நாட்டில்‌ ஒரு பெரும்‌ பஞ்சம்‌ ஏற்பட்டது. சிறிது தங்கம்‌ தயாரித்துக்‌ கொடுத்தால்‌ அதை விற்று நாங்கள்‌ பஞ்சம்‌ போக்கிக் கொள்வோம்‌ என்று மக்கள்‌ வேண்ட தேரையர்‌ மிகப்பெரிய நாக மலையையே தங்கமாக்க முற்பட்டார்‌. அவரது சீடர்கள்‌ அம் மலையைச்‌ சுற்றி துருத்திகளை வைத்துத்‌ தீ மூட்டி ஊதினார்கள்‌. மலையைச்‌ சுற்றி உண்டான அதிக வெப்பத்தையும்‌ புகையையும்‌ தாங்க முடியாமல்‌ அம் மலையில்‌ வாழ்ந்த மிருகங்கள்‌ நான்கு பக்கமும்‌ சிதறி ஓடின; பறவைகள்‌ பறந்தோடின. அந்த மலை மீது தவம்‌ செய்து கொண்டிருந்த ரிஷிகள்‌ அகத்தியரிடம்‌ வந்து உங்கள்‌ சீடனால்‌ நாங்கள்‌ தவம் புரிய இடமின்றி தவிக்கிறோம்‌ என்று முறையிட்டனர்‌. அதனால்‌ கோபங்கொண்ட அகத்தியர்‌ தேரையரை அழைத்து வரச்செய்து அவரது கால்களைப் பிடித்து அவர்‌ உடலை இரண்டாகக்‌ கிழித்தெறிந்துவிட்டார்‌.

தனக்கு இப்படி ஒரு ஆபத்து வரக்கூடும்‌ என்பதை முன்னரே யூகித்து அறிந்திருந்த தேரையர்‌ தன்‌ முக்கிய சீடர்கள்‌ இருவருக்கு பிரிந்த உடல்‌ சேரவும்‌ மீண்டும்‌ உயிர்‌ பெற்று எழவும்‌ செய்யும்‌ மூலிகை மருத்துவத்தைக்‌ கற்றுக்கொடுத்திருந்தார்‌. அந்தச்‌ சீடர்களும்‌ அவர்‌ கூறியிருந்தபடி மூலிகை மருத்துவம்‌ செய்து தங்கள்‌ குருவை உயிர்‌ பெற்று எழச்‌ செய்துவிட்டார்கள்‌.

குருவுக்கு பார்வை கொடுத்த வரலாறு


பார்வைக்‌ குறை

பிழைத்தெழுந்த தேரையர்‌ மீண்டும்‌ குருவின்‌ கண்களில்‌ படாதவாறு தொலைவில்‌ உள்ள ஒரு இருண்ட காட்டில்‌ காட்டு மனிதனைப்போல்‌ வாழ்ந்து வந்தார்‌. அந்தக்‌ காலகட்டத்தில்‌ அகத்தியருக்குப்‌ பார்வைக்‌ குறை ஏற்பட்டது. அவரது சீடர்கள்‌ அருகில் உள்ள காட்டில்‌ ஒரு காட்டுவாசி மூலிகைகளைக்‌ கொண்டு எல்லா வியாதிகளையும்‌ தீர்த்து வருகிறான்‌. அவனை அழைத்து வரலாமா' என்று கேட்க அகத்தியரும்‌ அனுமதித்தார்‌. அவன்‌ தேரையன் தானா என்று சோதித்தறிய குருநாதர்‌ நீங்கள்‌ போகும்‌ போது இரவில்‌ புளிய மரத்தடியில் தான்‌ உறங்கவேண்டும்‌ என்று கட்டளையிட்டார்‌.

காட்டுவாசி


காட்டு வழியில்‌ பல நாள்‌ நடந்து சென்று சீடர்கள்‌ காட்டுவாசியைக்‌ கண்டுபிடித்தனர்‌. அந்தக்‌ காட்டுவாசி உடல்‌ எல்லாம்‌ உரோமம்‌ வளர்ந்து கரடி போலக்‌ காட்சியளித்தான்‌. சீடர்கள்‌ இருமி இருமி இரத்தவாந்தி எடுத்ததைக்‌ கண்ணுற்ற காட்டுவாசி ஏன்‌ இப்படி? என்று கேட்க சீடர்கள்‌ “எங்கள்‌ குருவின்‌ஆணைப்படி நாங்கள்‌ நடந்து வந்த நாளெல்லாம்‌ புளிய மரத்தடியிலேயே உறங்கி வந்தோம்‌' என்றனர்‌. காட்டுவாசி நீங்கள்‌ திரும்பிச் செல்லும் போது வேப்ப மரத்தின்‌ நிழலில்‌ மட்டுமே உறங்குங்கள்‌. குருவிடம்‌ போய்ச்‌ சேர்வதற்குள்‌ குணமாகி விடுவீர்கள்‌. உங்களுக்கு வேறு மருந்து தேவையில்லை என்று கூறி நீங்கள்‌ எதற்காக என்னை நாடி வந்தீர்கள்‌? என்று கேட்டான்‌.

எங்கள்‌ குருநாதர்‌ பார்வைக்‌ கோளாறால்‌ அவதிப்படுகிறார்‌. உங்களால்தான்‌ அவரைக்‌ குணப்படுத்த முடியும்‌ என்று கருதியே வந்தோம்‌'. என்றார்கள்‌: தன்னை யாரென்று தெரிந்துகொள்ளவே குருநாதர்‌ அழைத்திருக்கிறார்‌ என்பதைப்‌ புரிந்து கொண்ட தேரையர்‌. நான்‌ இரண்டு நாளில்‌ வருகிறேன்‌. நீங்கள்‌ போய் வாருங்கள்‌ என்று கூறி சீடர்களை அனுப்பிவைத்தார்‌. அவர்கள்‌ திரும்பும்‌ வழியில்‌ வேப்பமர நிழலிலேயே கண்ணுறங்கி நலமாகப்‌ போய்ச்‌ சேர்ந்து குருநாதரிடம்‌ நடந்தவைகளை ஒன்று விடாமல்‌ கூறினர்‌. அகத்தியரும்‌ அந்தக் காட்டுவாசி தேரையர்‌ என்று தெரிந்து கொண்டார்‌.

கண்வெடிச்சான்‌ மூலிகை

காட்டுவாசி தான்‌ கூறியபடி இரண்டுநாள்‌ கழித்துப்‌ புறப்பட்டு அகத்தியரிடம் வந்து அவர்‌ கால்களைத்‌ தொட்டு வணங்கினான்‌. அவர்‌ கண்களில்‌ மருந்து பிழிந்து பார்வை பெறவும்‌ செய்தான்‌. தன்னிடம்‌ வந்துள்ள கரடி மனிதன்‌ தேரையர் தான்‌ என்பதை மேலும்‌ உறுதி செய்து கொள்ள அகத்தியர்‌ அவனிடம்‌, 'யாராலும்‌ கண்டுபிடிக்கக் கூட முடியாத கண்வெடிச்சான்‌ மூலிகை எனக்கு வேண்டும்‌. அதை உன்னால்‌ கொண்டு வர முடியுமா' என்று கேட்டார்‌. நான்‌ நிச்சயம்‌ கொண்டு வந்து தருகிறேன்‌ என்று கூறி குருநாதரிடம்‌ அவன் விடை பெற்றுச்‌ சென்றான்‌.

மூலிகை மருத்துவத்தின்‌ தந்தை

வெளிச்சென்ற காட்டுவாசி பொதிகை மலைப்‌ பகுதிகள்‌ முழுவதையும்‌ தேடி பல்வேறு வகையான அரிய மூலிகைளையும்‌ அவற்றின்‌ பயன்களையும்‌ கண்டுபிடித்தான்‌. இந்த முயற்சியில்‌ காட்டுவாசியாக உள்ள தேரையர்‌ மூலிகை மருத்துவத்தின்‌ தந்தையாகி விட்டார்‌ என்றே கூறலாம்‌. கடைசியில்‌ பொதிகை மலையின்‌ உச்சிப்பகுதியில்‌ ஒரு மலையில்‌ கண்வெடிச்சான்‌ மூலிகைச்‌ செடி இருப்பதையும்‌ கண்டுபிடித்தார்‌. அந்த மூலிகையைப்‌ பறித்தால்‌ அதிலிருநது வெளிப்படும்‌ நச்சுப்புகையால்‌ பறித்தவனுடைய கண்களே அவிந்துவிடும்‌ என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்‌. அதனால்‌ அவர்‌ அங்கேயே ஆழ்ந்த தியானத்தில்‌ அமர்ந்து அன்னை பராசக்தியை வேண்டி 'அன்னையே' என்‌ குருநாதர்‌ எனக்கு வைத்துள்ள தேர்வில்‌ நான்‌ வெற்றி பெற நீயே எனக்கு அருள்‌ புரிய வேண்டும்‌' என்று வேண்டினார்‌:சிறிது நேரத்தில்‌ “தேரையா! இதோ நீ கேட்ட மூலிகை' என்று அசரீரி ஒலித்தது. கண்‌ விழித்துப்‌ பார்த்த தேரையர்‌ முன்‌ அந்த மூலிகைக்‌ கொத்து ஒன்று அதன்‌ நச்சுத்தன்மை வெளிப்படா வண்ணம்‌ பத்திரமாக ஒரு இலையில்‌ சுற்றி வைக்கப்‌பட்டிருந்தது. நன்றியுடன்‌ அன்னை பராசக்தியை வழிபட்டுவிட்டுத்‌ தேரையர் அந்த மூலிகைச் சுருளை அகத்தியர் முன் கொண்டு போய் வைத்தார்.

தேரையர்‌ மருத்துவம்

இந்த குரு- சீடர்களிடையே இருந்த ஒளிவு மறைவு இதற்கு மேலும் நீடிக்கவில்லை. அகத்தியர் தேரையரை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டு அன்புத் தேரையனே நான் வைத்த எல்லா சோதனைகளிலும்‌ நீ தேறி விட்டாய்‌. நீ இப்போது பொதிகை மலையில்‌ நடத்திய ஆராய்ச்சிகள்‌ அனைத்தையும்‌ தொகுத்து ஒரு மூலிகை மருத்துவ ஆய்வு நூல்‌ எழுது. அது வருங்கால மருத்துவ உலகிற்கு முன்னோடியாகவும்‌ வழிகாட்டியாகவும்‌ இருந்து வரும்‌. சித்த மருத்துவத்தில்‌ தேரையர்‌ மருத்துவம்‌ என்ற பெயரால்‌ தனிச் சிறப்புடன்‌ நிலைத்து நிற்கும்‌.” என்று மனமாற வாழ்த்தி அனுப்பினார்‌. குருவின்‌ ஆணைப்படி தேரையர்‌ பல மருத்துவ நூல்கள்‌ எழுதியுள்ளார்‌. அவைகளில்‌ குணபாடகம்‌, வைத்திய யமக வெண்பா, பதார்த்த குண சிந்தாமணி போன்ற பல மருத்துவ ஆய்வு நூல்கள்‌ இன்றும்‌ சித்த மருத்துவ ஆய்வாளர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றன. இருபதாம்‌ நூற்றாண்டின்‌ சித்தர்‌ மருத்துவ மேதைகளில்‌ ஒருவரான சென்னை டாக்டர்‌ ஆர். தியாகராஜன்‌ அவர்களின்‌ தேரையர் பற்றிய தனி ஆய்வு நூல்கள்‌ இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்‌.

இது போல, இன்னொரு முறை வயிற்று வலி வந்த ஒரு அரசனுக்கு, அகத்தியர்‌ மருந்து கொடுத்தும்‌ குணமாகவில்லை. ஆனால்‌ அதே மருந்தை தேரையர்‌ கொடுத்ததும்‌, குணம்‌ கிட்டியது. இது அகத்தியருக்கே, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தேரையர்‌ இடமே, அகத்தியர்‌ இது பற்றி கேட்க. அந்த மருந்தை வாயில்‌ உள்ள பற்கள்‌ மற்றும்‌ எச்சில்‌ படாமல்‌ வயிற்றுக்குள்‌ செலுத்தினால்‌ குணம்‌ கிட்டும்‌ என்னும்‌ ரகசியத்தை தேரையர்‌, அகத்தியருக்கு விளக்கினார்‌.

இப்படியாக சிறப்புடன்‌ வாழ்ந்த தேரையர்‌ பிற்காலத்தில்‌ எழுதிய படைப்புகள்‌ பல. அவற்றில்‌ சில, பதார்த்த குண சிந்தாமணி, நீற்குறிநூல்‌, நெய்குறிநூல்‌, காமணி வெண்பா, மணிவெண்பா, நோயின்‌ கரிசல்‌, நோயின்‌ சாரம்‌, போன்றவை.

தேரையரின்‌ மருத்துவ குறிப்புகள்‌


(பழைய ஓலைச்‌ சுவடிகளில்‌ இருந்து)
தேரையரின்‌ மருத்துவ குறிப்புகள்‌ சிலவற்றை காணலாம்.

உப்பு இலவண மொன்றுமே யிளவெநீ ரிற்றின மலவலி வலியெலா மாண்டு நீறுகும்‌ மதுப்பூசிப்‌ புகளிலே யதிகமாய்க்‌ கொண்டே

பொருள்‌ : உப்பை இளவெந்நீரில்‌ கரைத்துப்‌ பருகினால்‌ மலசிக்கலைப்‌ போக்குவதுடன்‌ உடல்‌ வலியையும்‌ நீக்கும்‌ என்கிறார்‌ தேரையர்‌.

கர்ப்பூரவள்ளி

கர்ப்பூர வள்ளியின்‌ கழறிலை யைத்தின நற்பாலர்‌ நோயெலா நாசமா யாகலுமே.

பொருள்‌ : கர்ப்பூரவள்ளி இலையை முறைப்படி கொடுத்துவர, குழந்தைகளுக்கு வருகின்ற இருமல்‌, நெஞ்சில்‌ கபம்‌, உள்நாக்கு அழற்சி. (டான்சில்‌) நீர்கோவை, மாந்தம்‌ ஆகிய அனைத்தும்‌ ஓடிவிடும்‌.

பொன்னானங்கன்னி

சீதையை நாடொறுஞ்‌ சீரண வுண்டிடக்‌ காதைசேர்‌ நோயெலாங்‌ காதமோ டிடுமே.

பொருள்‌ :

சீதை எனும்‌ மறு பெயர்‌ கொண்ட பொன்னானங்கன்னிக்‌ கீரையை நாள்தோறும்‌ முறைப்படி உண்டு வர நோய்கள்‌ பல நீங்கும்‌ (கண்நோய்‌, உட்சூடு), மேனி நிறம்‌ பெறும்‌. பொன்‌ ஆம்‌ காண்‌ நீ- நீ இதை உண்டால்‌ உடல்‌ பொன்‌ மேனியாகக்‌ காண்பாய்‌ என்பதே இதன்‌ பெயரினால்‌ விளங்கும்‌ பொருள்‌.

ஜீவ சமாதி


தேரையர்‌ நீண்டகாலம்‌ மக்கள்‌ தொண்டும்‌ மருத்துவப்‌ பணியும்‌ செய்து முடித்து பொதிகை மலையைச்‌ சார்ந்துள்ள தோரண மலைப்பகுதியில்‌ சமாதி பூண்டுள்ளதாகக்‌ கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக