Top bar Ad

16/9/18

காலங்கிநாதர்

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. பெயர்க் காரணம்
  3. தசாவதார சித்தர்கள்‌ தரிசனம்‌
  4. சதுரகிரியில்‌ காலங்கிநாதர்
  5. வணிகனுக்குக்‌ கோவில்கட்ட பொன்கொடுத்த வரலாறு
  6. சமாதி கூடிய இடம்
  7. பிற்சேர்க்கை

முன்னுரை - தோற்றம்


காலங்கிநாதர் 3000ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார்.
(போகர் 7000/5743)

இவர் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் மயன் சாதியில் விஸ்வகர்மாவகத் தோன்றியவர் (போ.ஏ.5698). திருமூலருக்கு முதன்மையான சீடராயிருக்கும் பெரும்பேறு பெற்றவர். மூன்று யுகங்கள் சமாதி கூடியிருந்தவர். பாரதத்திலிருந்து ககன குளிகையின் உதவியால் விண்வெளியில் சீன நாட்டிற்கு சென்றவர். சீனாவில் சமாதி கூடியிருந்து மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர். அடிக்கடி சமாதியிலிருந்து வெளிப்பட்டு சீன நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தந்ததுடன் அருளுதவிகளும் செய்து வந்தார்

பெயர்க் காரணம்


இவரது பெயர்‌க்காரணம்‌ அரியானூர்‌ கரியபெருமாள்‌ வரலாற்றில்‌ இடம் பெற்றுள்ளது. (அரியானூர்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளது. கோவில்‌ அரியானூர்‌ பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில்‌ கஞ்ச மலை அடிவாரத்தில்‌ காட்டுக்குள் உள்ளது. இந்தப்‌ பெருமாள்‌ வரலாற்றுப்படி இந்த மாகசித்தர் சீனா நாட்டில்‌ உள்ள காலங்கி என்ற ஊரிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் அதனால்‌ காலங்கிநாதர்‌ என்ற பெயரைப்‌ பெற்றார்‌. பெரும்‌பாலோர்‌ கூறும்‌ மற்றொரு காரணம்‌. இவர்‌ உடல் எலும்பு, தசை, இரத்தம்‌, நரம்பு போன்ற அங்கங்களால்‌ ஆனதல்ல. காற்றையே உடம்பாகக்‌ கொண்டவர்‌ [கால்‌-காற்று; அங்கி - உடல்‌ ] அதனால்‌ காலங்கிநாதர்‌ என்ற காரணப் பெயரைப்‌ பெற்றுள்ளார்‌.

தசாவதார சித்தர்கள்‌ தரிசனம்‌


இந்த உண்மை போகர் சப்‌தகாண்டம்‌ 7000ல்‌ இடம்‌ பெற்றுள்ளது. திரேதாயுகத்தில்‌ ஒரு சமயம்‌ ஒரு மிகப்‌ பெரிய நீர்ப்பிரளயம்‌ ஏற்பட்டது. மழை வெள்ளத்தில்‌ உலகமே அழிந்துவிடும் போல்‌ இருந்தது. மழை வெள்ளத்தில்‌ பூமியே கொஞ்சம்‌ கொஞ்சமாக மூழ்கிக்‌ கொண்டிருந்த போது காலங்கிநாதர்‌ ஒரு மலையின்‌ உச்சியை நோக்கி மேலும்‌ ஏறிப் போய்க் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழுமியிருந்த ரிஷிகள் பலர் இதற்கும் மேலே செல்ல எங்களுக்கு சக்தி, இல்லை. வினாடிக்கு வினாடி நீர்மட்டம்‌ உயர்ந்து கொண்டே இருக்கிறது. உன்னால்‌ முடிந்தால்‌ நீ மேலே போய்விடு என்று கூறினார்கள்‌. மேலே ஏறிச்சென்ற காலங்கிநாதர்‌ எதிரே மிகப்‌ பெரிய புலி ஒன்று படுத்துக்கிடக்கக்‌ கண்டார்‌. பார்த்த மாத்திரத்தில்‌ அது! ஒரு புலியல்ல; புலி உருவில்‌ படுத்திருப்பவர்‌ ஒரு மகா சித்தரே என்பதை உணர்ந்து கொண்டார்‌
(செய்தி போகர்‌ 7000/6867 ஆம்‌ பாடலில்‌ இடம்பெற்றுள்ளது)

மேலும்‌ உயரே செல்லச்‌ செல்ல காலங்கி நாதர்‌ ஒருவர்‌ பின்‌ ஒருவராக மச்சரிஷியையும்‌, கூர்ம ரிஷியையும்‌, வராக ரிஷியையும்‌, நரசிம்ம ரிஷியையும்‌ கண்டார்‌. மேலும்‌ உயரே செல்லச்‌ செல்ல வாமனரிஷி, பரசுராமரிஷி, ராமரிஷி, பலராமரிஷி, பெளத்த ரிஷி. கல்கிரிஷி ஆகிய பத்து ரிஷிகளையும்‌ சந்தித்து ஆசிபெற்றார்‌. இவர்களையே கலியுக மனிதர்கள்‌ திருமாலின்‌ தசாவதாரங்கள்‌ என்று கூறியுள்ளனர்‌.

சதுரகிரியில்‌ காலங்கிநாதர்‌:


(ஞானவிந்த ரகசியம்‌' என்ற 30 பாடல்கள்‌ கொண்ட நூலில்‌ தன்‌ தவ வாழ்க்கை பற்றி காலங்கி. நாதரே கூறியது)

காலங்கிநாதர்‌ சதுரகிரி மலைப்‌ பகுதியில்‌ நீண்ட காலம்‌ தவ வாழ்க்கை வாழ்ந்தார்‌. அக்காலத்தில்‌ அம்மலைக்‌ குகைகளில்‌ நீண்டகால தவத்தில்‌ ஈடுபட்டிருந்த உயர்நிலை சித்தர்களையும்‌. மகரிஷிகளையும்‌ பற்றிக்‌ கூறியுள்ளார்‌. 9ஆம்‌ பாடலில்‌, அம்மலைக்கு சதுரகிரி என்ற பெயர்‌ வந்த காரணம்‌ வேதங்கள்‌ நான்கும்‌ ஒன்றாய்‌ சார்ந்திங்கு ஓருருவாய்‌ சமைந்ததாலே என்கிறார்‌. இதே பாடலில்‌ இங்குள்ள மகாலிங்கரின்‌ அடியைப்‌ போற்றி விண்ணவரும்‌, மண்ணவரும்‌ உயர்‌ முனிவர்‌ சித்தர்‌ எனப்‌ பெயர்‌'பெற்றாரே' என்கிறார்‌. 11-ஆம்‌ பாடலில்‌, அப்பகுதியில்‌ "நவசித்தர்‌ குகை ஒன்றுண்டு; நின்றந்தச்‌ சித்தர்களை மனத்துள்‌ எண்ணிநிதானமாய் அவ்வழியில்‌ போக வேண்டும் என்கிறார். அடுத்த மூன்று பாடல்களில் பாம்பாட்டி சித்தர் அத்திரி முனிவர், நாதாந்த சித்தர், வேதாந்த சித்தர், குதம்பை சித்தர், ஞான சித்தர், மிருகண்டேயர் வராரிஷி, தவ சித்தர், யோக சித்தர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரமர், அகப்பை சித்தர், நாதரிஷி, வியாச முனிவர், ஆகிய சித்தர்களும் மகரிஷிகளும் வாழ்ந்து வரும் குகைகளைப் பற்றிக் கூறியுள்ளார்.

வணிகனுக்குக்‌ கோவில்கட்ட பொன்கொடுத்த வரலாறு


காலங்கி நாதர்‌ சதுரகிரியில்‌ தவம்‌ இயற்றிக்‌ கொண்டிருந்த காலத்தில்‌ ஒரு நாள்‌ வணிகன்‌ ஒருவன்‌ அவரிடம்‌ ஓடிவந்து அவர்‌ காலில்‌ விழுந்து ஐயனே! ஒரு சிவாலயம்‌ கட்ட வேண்டும் ‌ என்ற ஆசையில்‌ ஆலயத்திருப்பணி வேலையையும்‌ தொடங்கிவிட்டேன்‌. தொடக்க காலத்திலேயே கட்டடம்‌ எழுப்பும்‌ பணியில்‌ கையில்‌ இருந்த செல்வம்‌ எல்லாம்‌ கரைந்துவிட்டது. வீடு நிலம்‌ எல்லாவற்றையும்‌ விற்று செலவு செய்துவிட்டேன்‌. ஆலயத்திருப்பணியில்‌ முழுமையாக ஈடுபட்டதில்‌ தொழிலையும்‌ விட்டுவிட்டேன்‌. இப்போது உணவுக்கும்‌ வழியின்றித் ‌திண்டாடுகிறேன்‌. செல்வந்தர்களும்‌, மன்னரும்கூட எனக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர்‌. இப்போது எனக்கு உங்களை விட்டால்‌ வேறு கதி இல்லை என்று வேண்டிக்‌ கதறினான்‌. காலங்கிநாதரோ அவனுக்கு பதில்‌ ஏதும்‌ கூறவில்லை. இருப்பினும்‌ வணிகன்‌ மனம்‌ தளரவும்‌ இல்லை. முனிவரை விட்டுச்‌ செல்லவும்‌ இல்லை. இரவு பகலாக அவருக்குத்‌ தொண்டு செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டான்‌. ஓர்‌ இரவு ஆழ்ந்த தூக்கத்தில்‌ அவன்‌ எப்போது நான்‌ கோவில்‌ கட்டுவேன்‌? எப்போது என்‌ ஐயனைப்‌ பிரதிஷ்டை செய்வேன்‌? என்று பிதற்றிக்‌ கொண்டிருந்தான்‌. அதைக்‌ கண்ணுற்ற முனிவ‌ர் அவன்‌ கோவில்‌ கட்டவே விரும்புகிறான் என்பதைப் புரிந்து கொண்டு அவன் மேல் இரக்கப்பட்டு அவனுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்‌. மலை மேலிருந்த பல அரிய மூலிகைகளைக்‌ கொண்டு வகாரத்‌ தைலம் என்ற தைலத்தைத்‌ தயாரித்து அதிலிருந்து சுத்த தங்கத்தைத்‌ தயாரித்துக்‌ கொடுத்தார்‌. வணிகனும்‌ அத்தங்கத்தை விற்று திருக்கோவிலைக்‌ கட்டி முடித்தான்‌.

மேலும்‌ வகாரத்‌ தைலம்‌ பொங்கிக்‌ கொண்டிருந்ததைக்‌ கண்ட சித்தர்‌ செம்பொன்‌ உண்டாக்கக்கூடிய அத்தைலத்தைத்‌ தீயோர்‌ எவரும்‌ எடுத்துப்‌ பயன்படுத்தக்‌ கூடாது என்பதற்காக அதை ஒரு கிணற்றில்‌ தேங்க வைத்தார்‌. அக்கிணற்றின்மேல்‌ ஒரு பாறையைப்‌ போட்டு மூடிவிட்டு அதன்‌ நான்கு புறத்திலும்‌ வராகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன்‌ ஆகியோரைக்‌ காவலுக்கு வைத்துவிட்டு மீண்டும்‌ தவமியற்ற வேறோரிடத்திற்குச்‌ சென்று விட்டார்‌. இந்த வரலாறு சதுரகிரி தல புராணத்தில்‌ உள்ளது.

சமாதி கூடிய இடம்


காலங்கிநாதர்‌ சீனநாடு இந்தியாவின்‌ வட, மத்திய பகுதிகளையெல்லாம்‌ சுற்றிக்கொண்டு கடைசியாக தமிழகம்‌ வந்து சேலம்மாவட்டத்தில்‌ உள்ள கஞ்சமலையில்‌ தவ வாழ்க்கை வாழ்ந்துவந்தார்‌. அப்போது மலையடிவாரத்தில்‌ சுயம்புவாக இரண்டு லிங்கங்கள்‌ தோன்றக்‌ கண்டார்‌. ஞானதிருஷ்டியால்‌ அந்த லிங்கங்கள்‌ இரண்டும்‌ லவன்‌, குசன்‌ என்று கண்டுணர்ந்தார்‌. அந்த லிங்கங்களுக்கு அவை தோன்றிய இடத்திலேயே கோவில்கட்டி வழிபட்டும்‌ வந்தார்‌. கடைசியில்‌ அங்கேயே ஜீவ சமாதியும்‌ அடைந்தார்‌. இவை யாவும்‌ திரேதா யுகத்தில்‌ நடந்து முடிந்தவை.இவையெல்லாம்‌ நடந்து முடிந்து பல ஆயிரம்‌ ஆண்டுகள்‌ ஆகிவிட்டன. கலியுகம்‌ தோன்றியே ஐயாயிரம்‌ ஆண்டுகளும்‌ கடந்துவிட்டன. லவகுசர்‌ கோவிலும்‌ சித்தர்‌ சமாதியும்‌ சிதைந்துபோய்‌ காலத்தால்‌ மண்‌ மூடி புதைந்துவிட்டன.ஒரு மூலவர்‌ பெருமாள்‌ சன்னதியும்‌ துவஜஸ்தம்பமுமே அங்கே கோவில்‌ இருந்ததற்கு அடையாளமாக எஞ்சி நின்றன.

சமீப காலத்தில்‌ கஞ்சமலைப்‌ பகுதியில்‌ வாழ்ந்து வரும்‌ சந்திரப்பிரகாசம்‌ என்பவருக்கு, சமாதிகூடிய காலங்கி நாதரின்‌ திருவருள்‌ கிடைக்கப்பெற்றது. தெய்வ நிலையில்‌ வாழ்ந்து வரும்‌ அந்த சித்தரின்‌ அருளால்‌ சந்திரப்பிரகாசம்‌ என்பவர்‌ உள்ளுணர்வில்‌ “நீண்ட காலத்திற்கு முன்‌ அங்கு லவகுசர்களின்‌ கோவில்‌ இருந்தது. அவர்களுக்குப்‌ பக்கத்திலேயே காலங்கி நாதரின்‌ ஜீவசமாதியும்‌ இருந்தது. சீதா தேவியார்‌ தன்‌ இரு பிள்ளைகளுடன்‌ அக்கினிப்‌ பிரவேசம்‌ செய்தபோது லவன்‌, குசன்‌ ஆகிய இருவரில்‌ குசன்‌ மட்டும்‌ தீயில்‌ கருவ கரிய மேனியுடன்‌, வெளிப்பட்டு இங்கு கரியபெருமாள்‌ என்ற திருப்பெயருடன்‌ கோவில்‌ கொண்டுள்ளார்‌. அருகிலேயே காலங்கிநாதரும்‌ கரடி சித்தர்‌ என்ற பெயருடன்‌ ஜீவ சமாதி பூண்டுள்ளார்‌ என்ற உண்மைகள்‌ தோன்றின.

அதைத்‌ தொடாந்து காலங்கிநாதரின்‌ கட்டளையைத்‌ தலைமேல்‌ கொண்டு அருவநிலையிலுள்ள அந்த மகாசித்தரின்‌ அனுக்ரகத்துடன்‌ சந்திரப்‌ பிரகாசர்‌ கரிய பெருமாள்‌ கோவிலை கஞ்சமலைக்கு அருகில்‌ உள்ள அரியானூரில்‌ சித்தர்‌ சமாதி கூடிய இடத்திலேயே எழுப்பினார்‌. மூலவருக்கு இடப்பாகத்திலேயே காலங்கிநாதரின்‌ சிலையையும்‌ பிரதிஷ்டை செய்தார்‌. கடந்த 2003. ஆம்‌ ஆண்டில்தான்‌ இக்கோவிலின்‌ குட முழுக்கும்‌ நிறைவேறியது இன்றும்‌ காலங்கிநாதர்‌ கரடிசித்தர்‌ என்ற திருநாமத்துடன்‌ அக்கோவிலில்‌ குடிகொண்டிருந்து மக்களுக்கு உதவி செய்து வருவதுடன்‌ வழிகாட்டியாகவும்‌ இருந்து வருகிறார்‌. அவருக்குக்‌ கரடி சித்தர்‌ என்ற பெயர்‌ வந்த வரலாறு பிற்சேர்க்கையாக உள்ளது.
காலங்கி நாதர்‌ கஞ்சமலையில்தான்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்பதைக்‌ கீழ்‌ வரும்‌ நிகழ்ச்சி உறுதிபடுத்துகிறது.
இதன்படி:

காலங்கிநாதர்‌ அவருடைய குருநாதர்‌ திருமூலருடன்‌ கஞ்சமலைப்பகுதிக்கு வந்தார்‌. சீடரை உணவு சமைக்கச்‌ சொல்லிவிட்டு குருநாதர்‌ மலைச்சாரல்களில்‌ மூலிகைகளைத்‌ தேடிச்‌ சென்று விட்டார்‌. அரிசி வெந்து கொண்டிருந்த போது காலங்கி, அருகில்‌ இருந்த ஒரு செடியின்‌ குச்சியை ஒடித்து அதைக் கொண்டு சோற்றைக் கிளறினார்‌. அதன்‌ விளைவாக சோறு கருப்பாகிவிட்டது. குரு வந்தால்‌ கோபிப்பாரே என்ற பயத்தில்‌ அவர்‌ கருகியிருந்த சோறு முழுவதையும்‌ தானே சாப்பிட்டுவிட்டார்‌. சாப்பிட்ட மாத்திரத்தில்‌ அவர்‌ ஒரு இளம்‌ வாலிபனாக மாறிவிட்டார்‌.அவர்கிளறிய குச்சி ஒரு அரிய மூலிகை என்பது அப்போதுதான்‌ அவருக்குத்‌ தெரிந்தது.திரும்பி வந்த திருமூலர் தன் சீடனின் உடலில் ஏற்பட்ட மற்றத்தினைக் கண்டுவியந்து தனக்கும் அந்த இளமை வரவேண்டும் என்றார்.காலங்கிநாதர் தன் விரல்களைத் தொண்டைக்குள் வீட்டுக் குமட்டி சாப்பிட்ட சோற்றையெல்லாம் வாந்தி எடுத்தார் அதை சாப்பிட்ட மாத்திரத்தில்‌ குருநாதர்‌ திருமூலரும்‌ இளைஞராகி விட்டார் இதனால்‌ பெருமகிழ்ச்சி அடைந்த குருநாதர்‌ தன்‌ சீடருக்கு தவத்திட்சை அளித்து காலங்கிநாதரை சுத்தசித்தர்‌ நிலைக்கு உயர்த்திவிட்டார்

நிறைநிலை சித்தரான காலங்கி நாதர்‌ மீண்டும்‌ ஆயிரம்‌ ஆண்டுகள் கஞ்சமலையின்‌ தெற்கேயுள்ள உத்தம சோழபுரத்தில்‌ எழுந்தருளியிக்கிற கரபுரீஸ்வரர் நினைத்து தவமிருந்தார். பிறகு ஒரு நாள் ஆதிசிவன் அவர் ‌முன்‌ தோன்றி அவருக்கு சித்தேஸ்வரர்‌ என்ற திருநாமம்‌ சூட்டி கஞ்ச மலைப்பகுதியிலேயே இருந்து அருளாட்சி அருளாட்சி செய்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார்‌.
இறைவன் கட்டளைக்கிணங்க காலங்கிநாதர் கஞ்ச மலையிலயே வீராசனத்தில்‌ இரண்டு யுக காலமாக சித்தேஸ்வரராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்‌.

இன்றும்‌ பெளர்ணமிதோறும்‌ சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் ‌18 கி.மீ. சுற்றளவு கொண்டுள்ள கஞ்ச மலையைச்‌ சுற்றி கிரிவலம்‌ வந்து கஞ்சமலை சித்தேஸ்வரராக அருள்புரியும்‌ காலாங்கிநாதரை வழிபட்டு நலம்பெற்று வருகின்ற பக்தர்கள்‌ ஏராளம்.

இந்த மலைக்கோவிலுக்கு சேலம்‌ பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக பேருந்துகள்‌ செல்கின்றன. இக்கோவிலில்‌ சித்தேஸ்வரராக இருந்து இறைமாட்சி செய்துவரும்‌ காலங்கி நாதர்‌ கஞ்சமலை சித்தர் ‌ என்றும்‌ வழங்கப்படுகிறார்‌.
ஆனால்‌ போகர்‌ 7000 என்ற நூலில்‌ 5742 ஆம்‌ பாடலில்‌:

சித்தான காலங்கி முனிவர்தானும்‌ சிறப்புடனே சீனபுதிதன்னிலசென்று முனையானை சமாதி தனிலிறங்கியல்லோ பக்தியுள சீனபதி மாந்தருக்கு பலகாலும்‌ தரிசனங்கள்‌ புரிகுவாரே
என்றுள்ளவாறு காலங்கிநாதர்‌ சீன தேசத்தில்‌ சமாதி பூண்டுள்ளார்‌.

ஒரு சமயம்‌ போக முனிவர்‌ சீன நாட்டில்‌ காலங்கிநாதர்‌ சமாதி அடைந்திருந்த முக்காதக்‌ கோட்டைக்குள்‌ நுழைந்து அவரை வணங்கி நின்றார்‌. அப்போது சமாதி கூடத்தின்‌ கதவு தானாகவே திறந்து கொண்டது. காலங்கிநாதர்‌ ஒளிமயமாகப்‌ போகருக்குத்‌ தரிசனம்‌ தந்தார்‌. இந்த இருவேறு ஆதாரங்களின்படி காலங்கிநாதர்‌ சீனாவில்‌ சமாதியடைந்துள்ளார்‌ என்று எண்ண வேண்டியுள்ளது.

போகரின்‌ 'ஜனன சாகரம்‌' என்ற நூலின்‌ 306 ஆம்‌ பாடலில்‌வரும்‌,
ஆதியென்ற சிதம்பரமே திருமூலராச்சு அவருடன்‌ பதினெண்‌ பேரதிலேயாச்சு சோதியென்ற காலங்கி நாதர்தாமும்‌ துலங்குகின்ற காஞ்சிபுரந்தனிலேயாகும்‌

என்ற அடிகளின்படி காலங்கிநாதர்‌ காஞ்சிபுரத்தில்‌ ஜோதி வடிவிலே சிவத்துடன்‌ கலந்தார்‌ என்று கொள்ள வேண்டியுள்ளது: காலங்கிநாதர்‌ திருக்கடவூரில்‌ சமாதி பூண்டுள்ளார்‌ என்றும்‌ சில சித்த ஆய்வு நூல்கள்‌ கூறுகின்றன. அவர் எங்கே சமாதி கொண்டுள்ளார்‌ என்பது சரியாகத்‌ தெரியவில்லை என்றாலும் அவரை உண்மையாக வழிப்பட்டு வரும் பக்தர்கள் அனைவர்களின் இதயங்களில் குடிகொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது மட்டும் உலகம் உள்ளளவும் மறுக்க முடியாத உண்மை.

பிற்சேர்க்கை


காலங்கிநாதருக்கு கரடிசித்தர் என்ற பெயர் வந்த வரலாறு

அக்காலத்தில்‌ உத்தம சோழபுரத்தில்‌ வாழ்ந்து வந்த காடன்‌ என்பவனுக்கு நான்கு பெண்கள்‌ இருந்தனர்‌. அவனுடைய தங்கை மகன் ஒருவன்‌ அவனிடம்‌ வேலை செய்து வாழ்ந்துவந்தான்‌. தன்‌ பெண்கள் பெரியவர்கள்‌ ஆனதும்‌ தன்‌ முதல்‌ மகளைத்தன்‌ மருமகனுக்குத்‌ திருமணம்‌ செய்து கொடுப்பதாக வாக்களித்‌தார். ஆனால் வாக்கு தவறி அவனை வேறு ஒரு உறவினனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவ்வாறே வாக்கு தவறி இரண்டாவது மகளையும்,மூன்றாவது மகளையும்கூட வேறு இருவருக்கு மணம் முடித்து விட்டார்

காடனின் மருமகன்,தன்மாமன் அவனது நான்காவது மகளையும் தனக்கு மணம் செய்து கொடுக்கமாட்டான் என்பதை தெரிந்திருந்தாலும்‌ தன்‌ மாமன்‌ வாழ உண்மையாக உழைத்து வந்தான்‌. ஒருநாள்‌ மாமனும்‌ மருமகனும்‌ மலைக்காட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது காடன்‌ தன்‌ மருமகனிடம்‌, என்‌ நான்காவதுதமகள்‌ உனக்குத்தான்‌ என்றான்‌. அதைச்‌ சிறிதும்‌ நம்பாத மருமகன்“தான்‌ இனியும்‌ ஏமாறத்‌ தயாராக இல்லை. உன்‌ கடைசி மகளையும் நீ விரும்பும்‌ வேறு யாருக்காவது கொடுத்துவிடு. நான்‌ என் வழியைப்‌ பார்த்துக்‌ கொள்கிறேன்‌” என்றான்‌. அப்போது மலையில்‌ சித்தேஸ்வரராகக்‌ கோயில்‌ கெண்டிருந்து அருளாட்சி செய்து வரும்‌ காலங்கிநாதர்‌ ஒரு கரடி உருக்கொண்டு கரபூரீஸ்வரரை வழிபடுவதற்காக அவ்வழியே வந்தார்‌.அக்கரடியைக்‌ கண்ட காடன்‌, அவ்விலங்கு ஒரு மகா சித்த புருஷர்‌ என்பதை அறியாதவனாய்‌, அக்கரடியைக்‌ காண்பித்து, இக்கரடி சாட்சியாக என்‌ மகளை உனக்கே திருமணம்‌ செய்து கொடுக்கிறேன். இது சத்தியம், என்று மருமகனுக்கு வாக்கு கொடுத்தான்.

கொஞ்சம்‌ நாள்‌ கழித்து காடன்‌ தன்‌ மகளுக்கு வெளியில்‌ மாப்பிள்ளை தேடத்‌ தொடங்கினான்‌. அப்போது ஒரு நாள்‌ அவன்‌ மருமகன்‌ தங்கள்‌ உறவினர்கள்‌ யாவரையும்‌ கூட்டமாக அழைத்து வந்து வைத்துக்கொண்டு அவர்கள்‌ முன்னிலையில்‌ காடன்‌ மூன்று முறை சத்தியம்‌ தவறியதையும்‌, நான்காவதாகத்‌ தனக்குக்‌ கரடியை சாட்சியாக வைத்து சத்தியம்‌ செய்ததையும்‌. இப்போதும்‌ சத்தியம்‌ தவறிப்‌ பேசுவதையும்‌ விபரமாக எடுத்துரைத்தான்‌ . காடன்‌, தன்‌ மருமகன் தான்‌ பொய்‌ கூறுகிறான்‌ என்றான்‌. அதனால்‌ மனம்‌ உடைந்த மருமகன்‌ கடவுளை நினைத்து “நான்‌ சொல்வது உண்மையென்றால்‌ அந்தக்‌ கரடியே வந்து சாட்சி சொல்லி உண்மையை வெளிப்படுத்தட்டும்‌' என்று மனமுருகி வேண்டினான்‌. அடுத்த நொடியே காலங்கிநாதர்‌ அனைவரும்‌ காண கரடி உருவில்‌ அங்கே தோன்றி, மூன்று முறை தலை அசைத்து மருமகன்‌ சொன்னது உண்மையென்று நிரூபித்து அவனுக்கே காடன்‌ தன்மகளை மணம்‌ முடித்துக்‌ கொடுக்க வைத்தார்‌. அதுமுதல்‌ அவர்‌. கரடி சித்தர்‌ என்ற பெயராலும்‌ வழிபடப்பட்டு வருகிறார்‌. இந்த நிகழ்ச்சி கஞ்சமலை “அருள்மிகு சித்தேஸ்வர்‌ சுவாமி திருக்கோயில்‌ தல வரலாறு' என்ற நூலில்‌ இடம்பெற்றுள்ளது.

1 கருத்து:

  1. பெயரில்லா8 மே, 2024 அன்று 4:09 PM

    காலாங்கிநாதர் சித்தர் பற்றி மிக அருமையான தகவல்கள் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு