Top bar Ad

சித்தர்கள்‌

பொருளடக்கம்
  1. முன்னுரை
  2. சித்திகள்
  3. சித்தர்களின்‌ விளையாட்டு
  4. பதினெண்‌ சித்தர்கள்‌
  5. சித்தர்களின்‌ சமாதி
  6. சித்தர் கற்பம்
  7. மரணக்‌ குறியும்‌, அதை மாற்றும்‌ செயலும்‌

முன்னுரை


சித்தர்‌ சிவலோகம்‌ இங்கே தெரிசித்தோர்‌ சத்தழுஞ்‌ சத்த முடிவுந்தம்‌ முட்கொண்டோர்‌ நித்தர்‌ நிமலர்‌ நிராமயர்‌ நீள்பர முத்தர்தம்‌ முத்தி முதல்‌ முப்பத்தாறே
- திருமூலர்‌

சித்தர்‌ என்போர்‌ இப்பிறவியிலேயே சிவலோகத்தைக்‌ கண்டு களித்தவர்கள்‌ ஆவர்‌. தம்முடலிலேயே பரநாத ஒலியின்‌ முடிவையும்‌ கேட்டு அனுபவித்தவர்கள்‌ ஆவர்‌. என்றும்‌ நிலையாக வாழ்பவர்‌. குற்றமில்லாதவர்‌. நல்வினை தீவினையிலிருந்து நீங்கியவர்‌. மேலான முக்தியை அடைந்தவர்கள்‌. முப்பத்தாறு தத்துவங்களையும்‌ கடந்த பெருமையை உடையவர்கள்‌. மேலும்‌ சித்தர்கள்‌ என்றால்‌ சித்தி பெற்றவர்கள்‌, வீட்டின்பம்‌ அடைந்தவர்கள் என்று பொருள்‌ கொள்ளலாம்‌.

சித்‌ என்றால்‌ அறிவு எனப்படும்‌ சித்தை உடையவர்கள்‌, “சித்தர்கள்‌ அறிவு படைத்தவர்கள்‌, அறிஞர்‌ நுண்ணறிவு படைத்தவர்கள், மெய்ஞ்ஞானிகள் என்றும்‌ கூறலாம்‌.

இறைவனைக்‌ காண முயல்பவனைப் பக்தர்‌ என்றும்‌, கண்டு தெளிந்தவரைச் ‌ சித்தர்‌ என்றும்‌ தேவாரம்‌ பாகுபடுத்திக்‌ காட்டுகிறது. மனம்‌, புத்தி, சித்தம்‌. அகங்காரம்‌ என்பவற்றுள்‌ சித்தம்‌ எனப்படுவது எண்ணியதைத்‌ திண்ணமாக முடிப்பது. இறைவனை அடைந்தே தீருவது என்பது வைராக்கியம்‌. சித்தமாம்‌ வைராக்கியத்தில்‌ சித்து எனப்படும்‌ உணர்வுடன்‌ கூடி இறையனுபவத்தில்‌ திளைப்பவர்களே சித்தர்கள்‌ எனலாம்‌.

சித்தர்கள்‌ மதவாதிகளோ, வைதீகர்களோ, கயநலம்‌ கொண்டவர்களோ அல்லர்‌; மனிதாபிமானிகள்‌; பகுத்தறிவுவாதிகள்‌, தமக்கென வாழாப்‌ பிறர்க்குரியாளர்கள்‌ ஆவர்‌. உலக உயிர்களின்‌ இம்மை, மறுமை வாழ்வு நன்முறையில்‌ அமைய வேண்டும்‌ என்பதைத்‌ தமக்குரிய கடமையாகக்‌ கொண்டு வாழ்ந்த பெருமக்கள்‌ இவர்களை அறிவர்‌ என்ற சொல்லால்‌ நம்‌ இலக்கியங்கள்‌ போற்றுகின்றன.

மறுவில்‌ செய்தி மூவகைக்‌ காலமும்‌ நெறியின்‌ ஆற்றிய அறிவன்‌ தேயமும்‌

என இவர்களின்‌ செயலை தொல்காப்பியம்‌ கூறுகின்றது. இவர்கள்‌ காமம்‌, வெகுளி, மயக்கம்‌ ஏதுமில்லாத ஒழுக்கத்தினை உடையவராய்‌ இறப்பு, நிகழ்‌, எதிர்வு என்ற மூன்று வகைக்‌ காலத்திலும்‌ நிகழும்‌ நிகழ்ச்சிகளை முழுதும்‌ உணர்பவர்கள்‌.

நச்சினார்க்கினியர்‌

வாசி என்ற மூச்சினை அடக்கியாண்டு யோக சக்தியால்‌ உடலிலுள்ள மூலாதாரம்‌, கொப்பூழ்‌. இரைப்பை, நடு இதயம்‌, கழுத்து, தலை உச்சி என்ற ஆறு இடங்களிலும்‌ மனதை முறையாக நாட்டிக்‌ குண்டலினி சக்தியை எழுப்பி பலவிதமான அனுபவமும்‌, வெற்றியும்‌ கண்டு அப்பால்‌ உள்ள எல்லா மன பொருளில்‌ மனதை நிலைத்துச்‌ சித்தி பெறுபவரே சித்தர்‌ என நூல்கள்‌ கூறுகின்றன.

சித்திகள்


சித்திகள்‌ பல வகையுண்டு.
அவையாவன :
இட்டசித்தி, வாதசித்தி, யோகசித்தி, ஞானசித்தி,மந்திரசித்தி, அணிமாசித்தி முதலியன. வைத்தியச்‌ சித்திகளைப்‌ பெற்ற சித்தர்கள்‌ மற்ற துறைகளிலும்‌ கை வரப்‌ பெற்றவர்களாக விளங்கினர்‌.

சித்தத்தை சிவன்பால்‌ வைத்து சிந்தனையில்‌ மூழ்க மூழ்க சித்த விகாரம்‌ ஒடுங்கும்‌. அஃது. ஒடுங்க ஒடுங்க ஆத்ம சக்தி எனும்‌ ஆத்மஞானம்‌ அடைவதே இவர்கள்‌ குறிக்கோளாகும்‌. எவ்வகையால்‌ உடல்‌ வளர்ந்து அழிகின்றது எனக்‌ கண்டு தெளிந்தவர்கள்‌. அழியக் கூடிய இவ்வுடம்பைக்‌ கொண்டே ஞான சக்தியால்‌ மோஷ சாதன வழியைக்‌ கண்டவர்கள்‌. மேலும்‌ குண்டலினி சக்தியை எழுப்பி மணி, மந்திர, மருந்துகளினால்‌ மாறாத மதியமிர்தம்‌ உண்டு, நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு இவைகளால்‌ கேடு நேராத நித்திய உடம்பைப்‌ பெற்றவர்கள்‌ சித்தர்கள்‌, என்றும்‌ சாகாதவரே சித்தராவார்‌.

சித்தர்கள்‌ மரணமில்லாப்‌ பெருவாழ்வைப்‌ பெற்றவர்கள்‌, என்றும்‌ அழியாத உடம்பைப்‌ பெற்றவர்கள்‌, உடம்பு அழியாமல்‌ பாதுகாக்கும்‌ முறையை அறிந்தவர்கள்‌. தம்‌ உடம்பை வைத்து விட்டு உயிரற்ற மற்றொரு உடம்பிலே புகுந்து நடமாடும்‌ சக்தி படைத்தவர்கள்‌. வானமார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லும்‌ ஆற்றல்‌ உள்ளவர்கள்‌. மூன்று காலங்களையும்‌ அறிந்தவர்கள்‌. உலகம்‌ முழுவதிலும்‌ உள்ள விஷயங்களை இருந்த இடத்திலிருந்தே அறியும்‌ ஆற்றல்‌ பெற்றவர்கள்‌. சித்தர்களின்‌ பேராற்றலை குறுந்தொகை என்னும்‌ சங்க இலக்கியம்‌ சிறப்புடன்‌ பேசுகின்றது.

நிலம்‌ தொட்டுப்‌ புகார்‌ வானம்‌ ஏறார்‌ விளங்கிரு முன்னீர்‌ காலிற்‌ கொள்ளார்‌
- குறுந்தொகை

புத்த சமய நூலான மணிமேகலை என்னும்‌ செந்தமிழ்க்‌ காப்பியம்‌
நிலத்திற்குளித்து நெடுவீகம்‌ பேறிச்‌ சலத்திற்‌ திரியுமோர்‌ சாரணன்‌
என்று சித்தி பெற்றோரைச் சிறப்புடன்‌ கூறுகின்றது.
பிற்கால நூலான குறவஞ்சியில்‌ திரிகூடராசப்பக்‌ கவிராயர்‌ கவன சித்தர்‌ வந்து வந்து காயசித்தி விளைப்பார்‌ என்று சித்தால்‌ பெறும்‌ சிறப்பினைக்‌ கூறியுள்ளார்‌. சுருங்கக்‌கூறின்‌ சித்தர்கள்‌ எல்லாம்‌ செய்ய வல்லவர்கள்‌, அவர்களால்‌ எதையும்‌ செய்ய முடியும்‌ என்று பாம்பாட்டி சித்தர்‌ கூறுகின்றார்‌.

ஆதிசேடன்‌ ஆகிலுமே அங்கையினாலே ஆட்டி விடுவோம்‌ எங்கள்‌ ஆக்கினைக்குள்ளே நீதியோடு அடங்கியே நின்றிடச்‌ செய்வோம்‌ நின்ற நிலை தவறாமல்‌ ஆடு பாம்பே
செப்பரிய மூன்றுலகம்‌ செம்பொன்‌ ஆக்குவோம்‌ செங்கதிரைத்‌ தண்கதிராய்ச்‌ செய்து விடுவோம்‌ இப்பெரிய உலகத்தை இல்லாமல்‌ செய்வோம்‌ எங்கள்‌ வல்லபம்‌ கண்டு ஆடு பாம்பே
எட்டு மலைகளைப்‌ பந்தாயெடுத்‌ தெறிகுவோம்‌ ஏழு கடலையும்‌ குடித்‌ தேப்பமிடுவோம்‌ வானத்தையும்‌ வில்லாய்‌ வளைத்திடுவோம்‌ மூண்டெறியும்‌ அக்கினிக்குள்‌ மூழ்கி வருவோம்‌

என்‌ற பாடல்‌ வரிகளால்‌ அறியலாம்‌.

சித்தர்கள்‌ சிவநெறியைப்‌ பூண்டு ஒழுகியவர்கள்‌. சித்த சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌.உடம்பைப் பொய்‌ என்ற வாதத்தை மறுத்து மாறாக உடம்பை மெய்‌ என்று கூறியவர்கள்‌ தமிழ்‌ மருத்துவமாம்‌ சித்த மருத்துவத்திற்கும்‌ இவர்களே காரணமாவார்கள்‌. இவர்கள்‌ வல்லமைக்கு மேலும்‌ ஒரு சான்று :

காரப்பா சித்தன்‌ கற்‌ பத்தோ டொன்றிக்‌ கைலாச பாசமதாய்க்‌ கருதி வாழ்வான்‌ நேரப்பா கற்பமதை யுண்டு தேறி நிசமான வாசியிற்‌ சென்றிருப்பான்றானே தானான தானவனாய்‌ நின்று வாழ்வான்‌. சதாகோடி நாளுமொரு நாளாய்‌ நிற்பான்‌ ஊனான காயாதி கற்ப மெல்லாம்‌ உண்டு கரையேறியவ னுறிதியாவான்‌ வானான அண்ட பகிரண்ட மெல்லாம்‌ வரை கடந்த திரையகற்றி வந்து சேர்வான்‌ தேனான மொழியுடையானமுது பானம்‌ தினந்தோறும்‌ கொள்பவனே சித்தனாமே
கடைப்பிள்ளை கலைஞானம்

சித்தன்‌ வாழ்வு என்பது முருகப்பெருமானது கோயில்‌ ஆகும்‌. முதல்‌ சித்தன்‌ முழு முதற்‌ பொருளாய்‌ விளங்கும்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. திருவிளையாடற்‌ புராணத்தில்‌ சிவன்‌ எல்லாம்‌ வல்ல சித்தராய்‌ வந்து சித்தர்களின்‌ பெருமையை விளக்குகின்றார்‌.

சித்தர்களின்‌ விளையாட்டு


சித்தர்களின்‌ விளையாட்டு எட்டாவன :
  1. ஞானதிருஷ்டி
  2. ஆகாயத்தில்‌ பறத்தல்‌
  3. கூடுவிட்டு கூடு பாய்தல்‌
  4. உயிர்ப்பித்தல்‌
  5. நோய்களைக்‌ குணப்படுத்துதல்‌
  6. தோன்றி மறைதல்‌
  7. பிறர்‌ நினைத்ததைக்‌ கூறல்‌
  8. அட்டமா சித்தியாடல்‌
முதலியனவாம்‌.
இதில்‌ கூறப்பட்டுள்ள அட்டமா சித்திகளின்‌ விபரம்‌ :
  1. அணிமா
  2. மகிமா
  3. இலகிமா
  4. கரிமா
  5. பிராப்தி
  6. பிராகாமியம்‌
  7. வசித்துவம்‌
  8. ஈசத்துவம்‌
அணிமாஅணுவைப்‌ போல்‌ சிறிதாதல்‌
மகிமா மேருவைப்‌ போல்‌ பெரிதாதல்‌
இலகிமா காற்றைப்‌ போல்‌ இலகுவாதல்‌
கரிமா பொன்‌ போல கனத்தல்‌
பிராப்தி எல்லாவற்றையும்‌ ஆளுதல்‌
பிராகாமியம்‌ கூடுவிட்டுக்‌ கூடு பாய்தல்‌
வசித்துவம்‌ எல்லாவற்றையும்‌ வசப்படுத்துதல்‌
ஈசத்துவம்‌ விரும்பியதை எல்லாம்‌ செய்தல்‌
என்பனவாகும்‌.

சித்தர்‌ ஆடல்நெறியைத் தவராஜ சிங்கமாகிய தாயுமானவர்‌ “சித்தர்கணம்‌” என்ற தலைப்பிலே பத்துப்‌ பாடல்களில்‌ சித்தர்களின்‌ சிறப்புகளையும்‌, பெருமைகளையும்‌ விரிக்கக்‌ கூறி வணக்கம்‌ செய்கிறார்‌.

சித்து என்ற சொல்‌ அறிவினைக்‌ குறிப்பதாகும்‌. சித்தர்கள்‌, எல்லாம்‌ அறியும்‌ வியாபக அறிவுடையவர்கள்‌. வியாபக அறிவு விளங்கிய அறிவு என்று கூறப்படும்‌. அனைத்தும்‌ உணரும்‌ வியாபக அறிவாகிய இறை இயல்பைச்‌ சித்தர்கள்‌ அடைந்திருப்பதால்‌ சித்தர்களை கடவுள் சக்தியாக வைத்து எண்ணுவர்‌.சித்தர்கள்‌ எல்லாம்‌ சமயத்திற்கும்‌ அப்பாற்பட்ட சர்வசமய சமரச சன்மார்க்கிகள்‌ ஆவார்கள்‌. திருமூலர்‌, நால்வர்‌. கருவூர்ச்‌ சித்தர்‌, குருநமச்சிவாயர்‌, குகைநமச்சிவாயர்‌, மெய்கண்டார்‌, தாயுமானவர்‌, பட்டினத்தடிகள்‌, வடலூர்‌ இராமலிங்கர்‌ இவர்கள்‌ எல்லாம்‌ இவ்வகைச்‌ சித்தர்களே!

அண்மைக்காலம்‌ வரை சித்தர்களைப்‌ பற்றி இரண்டாந்தர மதிப்பீடும்‌, அலட்சிய மனோபாவமும் தான்‌ சமூகத்தில்‌ காணப்பட்டது. மறைக்கப்பட்ட தமிழ்ச்‌ சித்தர்களின்‌ கொள்கைகள்‌ வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்‌. சித்தர்களைப்‌ பற்றி நீண்ட ஆய்வு செய்யப்பட வேண்டும்‌. மதம்‌, சாதி, ஆச்சாரம் போன்ற போர்வைகளை அகற்றிவிட்டு எளிமையான முறையில்‌ உண்மையான நடைமுறை வாழ்வியலை சொல்லி வைத்தவர்கள்‌ சித்தர்கள்‌.

அண்டத்தில்‌ இருந்தவாறென்று அறிந்திடு பிண்டத்தில்‌ அதனையே பேசு
என்றனர்‌.

மனிதனானவன்‌ அண்டத்தின்‌ ஒரு சிற்றுருவமே என்று உறுதியிட்டுக்‌ கூறுகின்றார்கள்‌ சித்தர்கள்‌. இஸ்லாம்‌ மதத்தைச்‌ சேர்ந்த குணங்குடி மஸ்தான்‌, பீர்முகமது, அமலமுனி போன்ற சித்தர்கள்‌ வேதாந்த அனுபவக்‌ கருத்துக்கு ஒப்பப்‌ பாடி மக்களின்‌ மனதைக்‌ கவர்ந்துள்ளனர்‌.

பதினெண்‌ சித்தர்கள்‌


நம்‌ நாட்டில்‌ அனேக சித்தர்கள்‌ இருப்பினும்‌ பதினெண்‌ சித்தர்களைச்‌ சிறப்பித்துக்கூறுவதைக்‌ காணலாம்‌. பதினெண்‌ சித்தர்களின்‌ பெயர்கள்‌ வித்தியாசப்படுகின்றன. இடைச்‌ செருகல்‌ காரணமாக பதினெண்‌ சித்தர்கள்‌ இவர்கள் தான்‌ என்று உறுதியிட்டுக்‌ கூற இயலாதவாறு உள்ளனர்‌. கருவூரார்‌ பாலத்திரட்டில்‌ கூறப்பட்டுள்ள பதினெண்‌ சித்தர்கள்‌ :

பார்த்திடவே நந்தீசர்‌, மூலத்தீசர்‌ பண்பான அகத்தீசர்‌, சட்டைநாதர்‌ போர்த்திடவே பதஞ்சலியும்‌, ஊனர்‌, கண்ணர்‌ கோரக்கர்‌, கமலமுனி, சண்டிகேசர்‌ கூர்த்திடவே இடைக்காடர்‌, சிவாயசித்தர்‌ கொங்கணவர்‌, தந்தையவர்‌, போகநாதர்‌ காத்திடவே மச்சமுனி, பிண்ணாக்‌ கீசர்‌ காலாங்கி சுந்தரரும்‌ காப்புத்தானே
என்ற வரிகளால்‌ அறியலாம்‌.
அபிதான சிந்தாமணியில்‌ கூறப்பட்டுள்ள பதினெண்‌ சித்தர்கள்‌ :

  1. அகத்தியர்‌
  2. போகர்‌
  3. கோரக்கர்‌
  4. கைலாசநாதர்‌
  5. சட்டைமுனி
  6. திருமூலர்
  7. நந்தி
  8. கூன்கண்ணர்‌
  9. கொங்கணர்‌
  10. மச்சமுனி
  11. வாசமுனி
  12. கூர்மமுனி
  13. கமலமுனி
  14. இடைக்காடர்‌
  15. பிண்ணாக்கீசர்‌
  16. சுந்தரானந்தர்‌
  17. ரோமரிஷி
  18. பிரம்மமுனி
  19. ஆகியோர்‌ ஆவர்‌.

சித்தர்களின்‌ சமாதி


சித்தர்களின்‌ சமாதி என்பது தன்னையும்‌ தன்னைச்‌ சுற்றிலுமுள்ளதை மறந்திருக்கும்‌ நிலை. நினைவற்ற ஆத்ம தியானம்‌. அதாவது இந்திரியம் முதலிய தத்துவ சேட்டைகட்கு எதுவாய்‌ உடம்பினுள்‌ நின்று அவற்றோடு கூடினும்‌, அவற்றில்‌ பற்றின்றி இருக்கும்‌ ஆன்மாவாகிய தன்னைத்தான்‌ காணல்‌ இது ஆறு விதமாகக்‌ கொள்ளப்படும்‌.

1. திரு விகற்ப சமாதி வேறுபாடில்லாத சமாதி
2. சவ்‌ விகற்ப சமாதி விகற்பத்தோடு கூடிய சமாதி
3. ஆருட சமாதி முற்றும்‌ துறந்த பின்‌ செய்யும்‌ சமாதி
4. சஞ்சார சமாதி ஓரிடத்திலும்‌ தங்காமல்‌ களைப்பில்லாமலற்‌ சஞ்சரித்துக்‌ கொண்டே புரியும்‌ சமாதி
5. வியவகார சமாதி உலக வியவகாரத்தில்‌ இருந்தபடியே செய்யும்‌ சமாதி
6. சக சமாதி சுகதுக்கங்களை பொருட்‌ படுத்தாமல்‌ சாதாரணமாக இஷ்டப்படி செய்யும்‌ சமாதி

சித்தர் கற்பம்


சித்தர் கற்பம் என்பது பொதுவாக சித்தர்கள்‌ நெடுநாட்கள்‌ இருக்கும் பொருட்டு உட்கொள்ளும்‌ மருந்து. இதற்கு சாகா மருந்து என்றும்‌ பெயர்‌. உடம்பை அழியாமல்‌ இருக்கச் செய்வதுடன்‌ கிழத்தனம்‌, மரணம்‌, பசி. இளைப்பு, தாகம், நித்திரை ஆகியன நிகழா வண்ணம்‌ என்றும்‌ இளமையகவே இருந்து காலம் கழித்து உடம்பை சித்தியாக்கி அனேக. ஆயிரம் ஆண்டுகள்‌ உயிருடன்‌ இருக்கச்‌ செய்யும்‌ மருந்து தான்‌ கற்பம் எனப்படுவது.

இதற்காக எவ்வாறு முயற்சிப்பது. காய சித்திக்குரிய மூலிகைகள்‌ கிடைக்கும்‌ இடம்‌, தயாரிக்கும்‌ முறை, உண்ண வேண்டிய முறை, பத்தியம்‌, அனுபவ முறை. பத்தியம்‌ தவறினால்‌ ஏற்படும்‌ தீமை, அவைகளை நீக்கும்‌ உபாயம் ஆகியவை அடியிற்கண்ட நூல்களில்‌ தெளிவாகக்‌ கூறப்பட்டுள்ளது.

  1. அகத்தீசர்‌ 100
  2. நந்தீசர்‌ 100
  3. போகர்‌ 44
  4. சட்டைமுனி 21
  5. கொங்கணவர்‌ 16
  6. திருமூலர்‌ 66
  7. கோரக்கர்‌ 90
  8. இராமதேசர்‌ 71
  9. உரோமரிஷி 500
  10. மச்சமுனி 200
முதலியன.

மரணக்‌ குறியும்‌, அதை மாற்றும்‌ செயலும்


ஒவ்வொருமனிதனின்‌ மரண காலத்தை 3ஆண்டு, 2ஆண்டு, 1 ஆண்டு, அரை ஆண்டு முன்னமும்‌ அடுத்தும்‌ இடது நாசி, வலது நாசி வழியாக நடந்து கொண்டிருக்கும்‌ சுவாசமானது அறிவிக்கின்றது. உலகினர்‌ பலர்‌ கவனிப்பதில்லை, யோகிகள்‌ சதா வாசி நாட்‌டத்தில்‌ இருந்து ஆயுளை விருத்தி செய்து கொண்டு மேல்நிலையை அடைகிறார்கள்‌. எதிர்காலத்தில்‌ மரணத்தைக்‌ குறித்து மேற்கண்ட விதம்‌ நடக்கும்‌ கலையை அவ்விதம்‌ நடக்க விடாமல்‌ அது சமயம்‌ பட்டினி இருந்து கலையை மாற்றி நடத்தினால்‌ பிற்காலத்தில்‌ வரும்‌ மரண அபாயத்திலிருந்து விடுபடலாம்‌.

இத்துடன்‌ காயகற்ப மருந்து உட்கொண்டு வந்தால்‌ பேருதவியாயிருக்கும்‌. இவை சித்தாதிகள்‌ பலரும்‌ கூறியிருப்பதுடன்‌ ஆறு மாதம்‌ ஏற்படும்‌ மரணக்குறி கண்டு கற்பம்‌ சாப்பிடு என்று மூவாயிரம்‌ ஆண்டு வாழ்ந்த திருமூலர்‌ கூறுகின்றார்‌.

தப்பாது வாய்நீர்‌ தான்றாக்கிற்‌ றனிமேல்‌ விழிலோ ஒப்பாகத்‌ தனுமறைய ஒழிந்திடுவன்‌ மதியாறில்‌ செப்பாகத்‌ தானிருக்கச்‌ சேர்ந்த நிழலலைந்திடினும்‌ அப்பாகேள்‌ சாவுநிசம்‌ அறிந்து கற்பம்‌ கொண்டிடே. திருமூலர்‌ நாடி

ஒவ்வொரு வருடத்திலும் தைமாதம் முதல்தேதி உத்ராயண காலம்‌. அன்று முன் தினமே விரதமிருந்து உதயத்திற்கு முன்னம்‌ 4 மணியிலிருந்து 6 மணி வரையிலும்‌ இடது நாசியில்‌ விடாமல்‌ சுவாசம்‌ நடத்த வேண்டும்‌. அவ்விதம்‌ நடத்தினால்‌ அன்றிலிருந்து 100 ஆண்டுகள்‌ உயிருடன்‌ இருப்பர்‌. ஆடி மாதும்‌ முதல்‌ நான்‌ உதயத்தின்‌ முன்னால்‌ 1 மணியிலிருந்து 6 மணி வரையிலும்‌ வலது நாசியில் சுவாசம் இருக்குமானால் அன்றிலிருந்து 100 ஆண்டுகள் இருப்பார்கள் என ஞானசர நால்‌ கூறுகின்றது. கலை மாறி நடக்குமானால்‌ அதை சரியாக்கி பத்திய பாதத்துடன் காய கற்ப மருந்து உட்கொண்டு பிராணயாயமாக செபம், சிவராச யோகம்‌, அகண்டாகாச ஞானக்கண் சாதனை செய்து வந்தால்‌ அபாய நிலைகள் மாறி விடும்.

இத்தகைய காயகற்பம்‌ பன்னிரெண்டு ஆண்டுகள் உண்டு வந்து தசதீட்சை முடித்தவர்களுக்கு சகல விஷ ஜந்துக்களாலும் , ரச பாசாணங்களினாலும்‌ உபாதை ஏற்படாது என்று ஞானவெட்டி கூறுகின்றது. மேற்கண்ட விபரங்கள் சட்டைமுனி கற்ப விதி 100, அமுத கலைஞானம் 1200, புலஸ்தியர்‌ 300, ஞானவெட்டி, காக புசுண்டர் போன்ற நூல்களில்‌ உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக